Sonntag, April 30, 2006

சினைமுட்டைப்பை(ovary) மாற்று சிகிச்சை

ஒரு சகாப்தம் இந்தியாவில்

- Srishiv -



இந்தக் கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம்,
குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே நம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் சிறந்த நகரமான மும்பையில் நடந்தேறியது. மருத்துவர். திரு. பிரவீன் ம்ஹாத்ரே என்பவரின் சீரிய முயற்சியால், டி.எஸ்.கோத்தாரி மருத்துவமணை , மும்பையில் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை நல்லமுறையில் நடந்தேறியது. இந்த சினைமுட்டைப்பையினை டர்னரின் நோய் (Turner's Syndrome)(இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு, ஒரே ஒரு x குரோமோசோம் மட்டுமே இருத்தல், இதன் விளைவுகள், குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிறக்கும் குழந்தை)(இந்த நோய் 2000 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு வரும் வாய்ப்புள்ளது)தாக்கியிருந்த ஒரு 17 வயது பெண்ணிற்கு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த டர்னரின் நோய் தாக்கிய குழந்தைகள் தங்கள் ஆயுளுக்கும் ஹார்மோன் தெரபி என்று கூறப்படும் ஒருவகை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும் , இந்த சிகிச்சை புற்றுநோயினை தோற்றுவிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சினைமுட்டைப்பையினை தானமாகக்கொடுத்தவர் அந்த பெண்ணின் 26 வயது உறவுப்பெண் ஒருவர், அவர் இரண்டு குழந்தைக்குத்தாயானவரும் கூட.


அரசாங்க விதிமுறைகளின் படியும், சட்டத்தின் படியும், இந்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், யார்வேண்டுமானாலும் இந்த சிகிச்சையினை இப்பொழுது செய்துகொள்ளலாம், இதன் மூலம், மாதவிடாய் சுழற்சியின் பிரச்சனைகள், மாதவிடாயே இல்லாதவர்களுக்கும் ஏற்படுத்துதல், கருமுட்டை உற்பத்தி மற்றும் அதன்மூலம் கரு உற்பத்தி, போன்ற பல பிரச்சனைகளைத்தீர்க்கமுடியும். மேலும், சட்டப்படி நம் மூன்றாம் உலக நாடுகளில் உயிரோடு இருக்கும் ஒருவரின் இருதயம் மற்றும் ஈரல் போன்ற உறுப்புகளை வேறொருவருக்கு மாற்றம் செய்யமுடியாது, முதல் உலகநாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளில் வேண்டுமானால் பகுதி ஈரல் மாற்று சிகிச்சை என்பது இப்போது சாத்தியத்தில் இருக்கும் ஒன்று. ஆனால், இந்த சினைமுட்டைப்பை மாற்று என்பதில் எந்த ஒரு சட்டச்சிக்கலும் இல்லை, மேலும், ஆரோக்கியமாக 35 வயதிற்குள்ளிருக்கும், ஒன்றிரண்டு குழந்தை பெற்ற எந்த பெண்ணும் தன் இரண்டு சினைமுட்டைப்பைகளுள் ஒன்றினை தாராளமாக தானமாக அளிக்கலாம். அது உறவினராகவோ அல்லது வேற்று ஆட்களாகவோ கூட இருக்கலாம் , இந்த 35 வயது அதிகபட்சமாக ஏன் நிர்ணயிக்கப்படுகின்றது எனில் , 35 வயதிற்கு மேல் பெண்களுக்கு அறுவை சிகிச்சையிலிருந்து ரணம் ஆறி குணம் பெற சற்று தாமதமாகலாம் என்பதாலே இந்த அதிகபட்ச வயது வரம்பு, தானம் பெறுவோருக்கு வயது வரம்பு இல்லை என்றே கூறியிருக்கின்றார் மருத்துவர்.


இன்றைய தேதியில் , விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், இன்றும் நம் நாட்டுப்புறங்களில் மாதவிடாய் வராத பெண்களினை இரண்டாம் தரமாக நடத்தும் கொடுமையினை இந்த மாற்று சிகிச்சை மாற்றிக்காட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் இதன்மூலம், மெனோபாஸ் என்று கூறப்படும் மாதவிடாய் நிற்றல் (வயது முதுமை அடையும்கால்) போன்ற நிகழ்வுகளிலிருந்தும் பெண்கள் விடுபெறலாம், இந்த மாற்று சிகிச்சை மூலம் எந்த வயதிலும் ஒரு பெண் குழந்தை பெறலாம், இது இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. மாற்று அறுவை சிகிச்சை செயத மருத்துவர் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தன் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சிறப்புப்படிப்பாக இந்த டர்னரின் குறைபாட்டினை தன் ஆய்வுக்கட்டுரைக்காக எடுத்துக்கொண்டு தன் இறுதி முடிவாக சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சையினை சிபாரிசு செய்தபோது அவரின் ஆசிரியர்கள் அனைவரும் சிரித்தது நம் மருத்துவரின் அறிவியல் ஆர்வத்தினை தூண்டிவிட அனைத்து சிறப்புக்கல்விகளையும் இதற்காகப்பயின்று இறுதியில் இன்று இந்தியாவிலும் ஒரு மாற்று சிகிச்சைக்கு அடிகோலமுடியும் என்று நிரூபித்து சரித்திரத்தில் நீங்காப்புகழ் பெற்றுவிட்டார் மருத்துவர் பிரவீன் ம்ஹாத்ரே. இவரினைத்தொடர்புகொள்ள :
pravinmhatre@hotmail.com
pravinmhatre@indiatimes.com

இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய ஆங்கிலச்சுட்டி :
http://www.scienceinafrica.co.za/2003/february/ovary.htm

மேலும் சூன் மாதம் 2005ஆம் ஆண்டில் ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தையினை தன் இரட்டை சகோதரியிடமிருந்து பெற்ற சினைமுட்டைப்பையின் மூலம் பெற்றெடுத்த ஒரு தாயின் விவரங்களையும் கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.nature.com/news/2005/050606/pf/050606-7_pf.html

மேலும் உலகின் முதல் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை பற்றி அறிய கீழ் காணும் சுட்டியினை சுட்டவும்,
http://www.exn.ca/Stories/1999/09/23/55.asp
பின் குறிப்பு : சென்ற கட்டுரை, சினைப்பையைப்பற்றியது, இது சினை முட்டைப்பையைப்பற்றியது, இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம், அதுவேறு , இதுவேறு, சினைப்பை என்பதை ஆங்கிலத்தில் யூட்ரஸ் என்பர், சினைமுட்டைப்பையை ஓவரி என்றும் அழைப்பர்.

ஸ்ரீஷிவ்...இந்திய தொழில்நுட்பக்கழகம் - குவஹாத்தி

quelle - பதிவுகள் srishiv

Donnerstag, April 13, 2006

செயற்கை கருப்பை - ஒரு வரம்

- ஸ்ரீஷிவ் -

தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.


இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.


இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."

இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?


- ஸ்ரீஷிவ் -
Quelle - பதிவுகள்