Donnerstag, Dezember 04, 2003

மன அழுத்தத்தில் இருந்து விடுபட - யோகா

வளர்ந்துவரும் உலகின் வேகத்தாலும் பரபரப்பான சூழ்நிலைகளாலும் மனஉளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வு முறைகள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலும் மன அழுத்தமும்தான் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. மனஉளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் இடம் தராமல் தப்பிப்பது எப்படி?

‘‘இதற்கு யோகாசனம் சிறந்த வழிமுறை. உலகம் முழுக்க இந்தியர் அல்லாதவர்களும் இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் பல்வேறு உடல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் யோகாவை நாடுகின்றனர். இவ்வகையில் இந்தியா உலகுக்களித்த கொடை யோகா’’ என்கிறார் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி.

மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் உதவியுடன் அதிக பரபரப்பான சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சில சிறப்பு பயிற்சி முறைகளை, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவலர்கள் உருவாக்கியுள்ளார்கள். சமீபத்தில் இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி முகாம் ஒன்றையும் இவர்கள் நடத்தியுள்ளார்கள். ‘‘இப்பயிற்சி முகாமில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இப்பயிற்சி ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிக்கான தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நம்புகிறோம்’’ என்கிறார் மங்கையர்க்கரசி. இந்த யோகாசன முறைகளைப் பற்றியும் அவற்றை எப்படி செய்வது, என்னென்ன பயன் என்பது பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர். எந்த சிறப்பு பயிற்சியும் இல்லாமல் வீட்டிலேயே இதைச் செய்யலாம் என்பதுதான் இதன் சிறப்பு.

சைனஸ் பிரச்னைகாரர்களுக்கு:
கபாலபதி _ என்பது ஆறு கிரியைகளில் ஒன்று. இதனை வஜ்ராசனம், பத்மாசனம் ஆகிய யோகா முறைகளில் இருந்தும்கூட செய்யலாம். படத்தில் உள்ளதுபோல் உட்கார்ந்து கொண்டு, இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அதே சமயம் வயிற்றை ‘பலூன்’ போன்று பெரிதாக்கவும் வேண்டும். இப்படிச் செய்யும்போது வலது கையையோ அல்லது இரண்டு கையையும் கூட வயிற்றுப் பகுதியில் வைத்துக் கொள்ளலாம். அப்போது மனதின் கவனத்தை ஒருமுகப்படுத்தி அடிவயிற்றுத் தசைப் பகுதியில் கொண்டுவர வேண்டும். தினமும் 50 முறைகள் முதல் 100 முறைகள் வரை இதனைச் செய்யலாம். கபாலபதி யோகா முறையில் ஆஸ்துமா, சைனஸ் பிரச்னைகள் குணமடையும். அதிகாலையில் செய்யும்போது மூளையின் செல்கள் புத்துணர்ச்சி அடையவும் வாய்ப்புண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
இதற்கு நாடி சுத்தி பிராணயாமம் சிறந்த முறை. படத்தில் காட்டியுள்ளதுபோல் அமர வேண்டும். இதற்கு பத்மாசனம் என்று பெயர். வலது கை பெருவிரலால் வலது நாசித் துவாரத்தை மூடிக்கொண்டு இடது நாசித் துவாரம் வழியாக 10 முறை மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு இடது நாசித் துவாரம் வழியாக 20 முறையாக அக்காற்றை வெளியேற்ற வேண்டும். இதனைச் செய்யும்போது மனதின் கவனம் ஆழ்ந்த சுவாசத்தின் எண்ணிக்கையில்தான் இருக்க வேண்டும்.

நாடி சுத்தி பிராணயாம முறை யோகாசனம் செய்யும்போது நாடி நரம்புகள் கிளர்ச்சியடைகின்றன. இதனால் ரத்தம் சுத்திகரிக்க வாய்ப்பு உண்டாகிறது. மேலும் மன அமைதி கிடைக்கும். (நினைவாற்றல் அதிகரிக்கும்) இதனால் ஆயுள் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டாகிறது.

மனதை ஒருமுகப்படுத்த:
முதலில் தரையில் இரண்டு கால்களையும் நன்றாக நீட்டி அமரவும். பிறகு வலது கை கட்டை விரல் மூலம் வலது காலை மடித்து இடது கால் தொடை மீது வைக்கவும். இதேபோல் இடது கை மூலம் இடது காலை மடித்து, வலது கால் தொடை மீது வைக்க வேண்டும். இப்போது இரண்டு குதிகால்களும் அடி வயிற்றுத் தசையைத் தொடுமாறு இருக்க வேண்டும். மனதின் கவனம் இதயத்தின் மையத்தில் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடமாவது இதனைச் செய்ய வேண்டும். இதற்கு பத்மாசனம் என்று பெயர்.

இந்த யோகாசன முறை மூலம் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குச் செல்ல வாய்ப்புண்டாகிறது. மேலும் தொடை தசைப் பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழும்பும் குறைக்கப்படும். மனதை நன்றாக ஒருமுகப்படுபடுத்தவும் இந்தப் பயிற்சி உதவும்.

நீரிழிவு மற்றும் பைல்ஸ் பிரச்னைகளுக்கு:
தரையில் இரண்டு கால்களையும் நன்றாக நேரே நீட்டி அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தி மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்புறம் சுவாசத்தை வெளியேற்றிக் கொண்டே, கைகளை கீழே முன்புறமாக இறக்கி, நன்றாக முன் நோக்கி குனிந்து, கைகளால் கால் கட்டை விரல்களைப் பிடிக்க வேண்டும். பிறகு முழங்கைகளை தாழ்த்தி தரையை தொடுமாறு செய்யவும். இதனைச் செய்யும்போது அடிவயிறு மற்றும் சுவாச உறுப்புகளின் மேல் மனதின் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதற்கு பஸ்ச்சி மோத்தாசனம் என்று பெயர்.

இந்த ஆசன முறையில் நன்றாக குனிவதால், குதிகாலில் இருந்து உச்சந்தலை வரையில் உள்ள, 14 நரம்புகளும் நன்றாக இழுக்கப்பட்டு பலப்படுத்தப் படுகின்றன. மேலும் வயிற்று வலி, தலை வலி, நீரிழிவு மற்றும் பைல்ஸ் பிரச்னைகளுக்கும் இம்முறை நல்ல தீர்வு. தொந்தி வயிற்றைக் குறைக்கவும் இந்த யோகாசனத்தைச் செய்யலாம்.

வயிற்றுக் கோளாறுகளுக்கு:
நன்றாக கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு பிறகு இரண்டு கால்களையும் 45 டிகிரி அளவு உயர்த்தவும். அப்புறம் இதுபோல் உடலையும் 45 டிகிரி உயர்த்தி கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இருபதிலிருந்து முப்பது விநாடிகள் வரை தொடர்ந்து இந்த நிலையில் இருக்கலாம். உடலையும் கால்களையும் உயர்த்தும்போது சுவாசத்தை உள்ளே இழுக்கவும். ஆசன நிலைக்கு வந்தவுடன் சுவாசத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். இதனைச் செய்யும்போது அடிவயிற்றில் மனதின் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதற்கு நவாசனம் என்று பெயர்.

இந்தமுறை உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கவும் தொப்பையைக் குறைக்கவும் உதவும். மேலும் வயிறு தொடர்பான கோளாறுகளையும் சரி செய்கிறது.

முதுகுத் தண்டை பலப்படுத்த:
அர்த்த மத்ஸேந்திராசனம் என்ற யோகா முறை முதுகுத்தண்டை பலப்படுத்துவதுடன் இடுப்புப் பகுதியிலுள்ள அதிக கொழுப்பைக் குறைக்கவும் உடல் மற்றும் முகத்தில் ஏற்படும் சுறுக்கங்களைக் குறைக்கவும் நல்லது. இதற்கு முதலில் இரு கால்களையும் நன்றாக நீட்டி தரையில் அமர வேண்டும். பிறகு வலது காலை மடித்து இடது முழங்காலுக்கு அருகில் வைக்கவும். அப்புறம் இடது கையை உயர்த்தி, சுவாசத்தை வெளியேற்றிவிட்டு, பிறகு இடது கையால் படத்திலுள்ளதுபோல் வலது முழங்காலைச் சுற்றி அதன் கட்டை விரலைப் பிடிக்க வேண்டும். பிறகு முகத்தை வலது பக்கம் திருப்பி வலது கையை தரையில் ஊன்றி முதுகை நன்றாகத் திருப்ப வேண்டும். இதுபோல் இடது காலுக்கும் செய்ய வேண்டும். இந்த முயற்சியின் போது மனதின் கவனம் கிட்னி மற்றும் அட்ரீனல் சுரப்பியின் மீது இருக்க வேண்டும்.

இதயத்தை பலப்படுத்த:
விபரீதகரணி என்ற யோகாசன முறை இதயத்தைப் பலப்படுத்துவதோடு, இளமையை பாதுகாக்கவும் ஆண்மையை அதிகரிக்கவும் தூக்கத்தில் விந்து நீங்குவதை தடுக்கவும் செய்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை பயக்கும் ஓர் அரிய ஆசனம் இது. தொழுநோய், தைராய்டு, மலேரியா போன்ற பிரச்னைகளுக்கும் இந்த ஆசன முறை நல்லது.

முதலில் முதுகு தரையில் தொட்டு இருக்கும்படி நன்றாக காலை நீட்டி படுக்க வேண்டும். பிறகு சுவாசத்தை உள்ளே இழுத்தவாறே கால்களை 90 டிகிரிக்கு உயர்த்த வேண்டும். அப்போது கைகளை உயர்த்தி இடுப்புப் பகுதியில் வைத்து உடலைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் வரை தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்கலாம். பின்பு மெதுவாக கால்களை மடித்து, இடுப்பை தரையில் வைத்து ஓய்வு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதைச் செய்யும் போது சுவாசம் இயல்பானதாக இருக்க வேண்டும். தைராய்டு மற்றும் பாரா தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை நினைத்துக் கொள்ளவும்.

இளம்பிள்ளைவாதம் மற்றும் மூட்டு வலிக்கு:
முதலில் முதுகை தரையில் வைத்துப் படுத்துக் கொண்டு, பிறகு சுவாசத்தை உள்ளிருத்தவாறே இரண்டு கால்களையும் 90 டிகிரிக்கு உயர்த்தவும். பிறகு சுவாசத்தை வெளியேற்றிவிட்டு இரண்டு கால்களையும் தலைக்குப் பின்புறம் கொண்டு வந்து கட்டை விரல்களால் தரையைத் தொட வேண்டும். தைராய்டு சுரப்பியை நினைத்துக் கொள்ளவும். ஆனால் இதய நோய் உள்ளவர்கள் தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகே இதனை செய்ய வேண்டும்.

இளம்பிள்ளை வாதம், மூட்டுவலி, காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்னைகள், சைனஸ் ஆகியவற்றுக்கு இம்முறை நல்ல பலன் தருகிறது. தைராய்டு மற்றும் பாரா தைராய்டு சுரப்பிகளுக்கு அதிகப்படியான இரத்த ஓட்டம் செல்வதால் இளமையும் பாதுகாக்கப்படும்.

நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு:
முதலில் கால்களை நேராக நீட்டி அமரவும். பிறகு கைகளை இடுப்புக்குப் பின்புறம் வைத்து கைகள் மீது அமரவேண்டும். அப்புறம் முழங்கைகளை தரையின் மீது வைத்து நெஞ்சு பாகத்தை உயர்த்தி, உச்சந்தலையால் தரையைத் தொட வேண்டும். இதனைச் செய்யும்போது, 15 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைக்க வேண்டும். மனதில் பிட்யூட்ரி சுரப்பியை நினைத்துக் கொள்ளவும். இந்தப் பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகமாக ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் சைனஸ§ம் நீங்கும். நெஞ்சுபாகம் நன்றாக விரிவடையும்.

ஜீரண உறுப்புகள் பலமடைய:
முழங்கால்களை நன்றாக விரித்து, கால் கட்டை விரல்களை தரையில் ஊன்றி உட்கார வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கவும். பிறகு அடிவயிற்றில் முழங்கால்களை வைத்து உள்ளங்கைகளை தரையில் வைக்க வேண்டும். சுவாசத்தை வெளியே விடவும். அடுத்து கைகளின் சப்போர்ட்டில் முன்பக்கமாக குனிந்து கால்களை ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நீட்ட வேண்டும். இப்போது சுவாசத்தை உள்ளே இழுக்கவும். மனதின் கவனத்தை சிறுகுடல் மற்றும் பெருங்குடலின்மீது வைக்க வேண்டும். இதற்கு மயராசனம் என்று பெயர். இந்த பயிற்சியில் கல்லீரல் பலப்படுத்தப்படுகிறது. நீரிழிவு, மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் அறவே நீங்கும். ஜீரண உறுப்புகள் கல்லை உண்டாலும் செரிக்கின்ற தன்மையை அடையும்.

பசியின்மையைப் போக்க:
புஜங்காசனம் முறை பசியைத் தூண்டுவதுடன் முதுகுத் தண்டின் மேல்பாகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை பலப்படுத்த நல்ல முறை. இதில் முதலில் வயிறும் நெஞ்சு பாகமும் தரையில் படுமாறு படுக்க வேண்டும். பிறகு தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் மேல் வயிறு என்று முறையே ஒன்றன் பின் ஒன்றாக தலையை உயர்த்த வேண்டும். நெஞ்சை உயர்த்தும்போது சுவாசத்தை உள்ளே இழுத்து, பிறகு கீழே இறக்கும்போது சுவாசத்தை வெளியேற்றவும்.

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது முதுகுத் தண்டின் மேல்பாகத்தின் மீது கவனத்தை குவிக்கவும். இப்படி செய்வதன் மூலம் அடிவயிறு நன்றாக இழுக்கப்படுவதால் தொந்தி கரையவும் வாய்ப்பு அதிகமாகிறது.

இடுப்பு வலி குறைய:
சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். 20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும். சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.

_ தளவாய் சுந்தரம்
நன்றி - குமுதம்

Samstag, November 15, 2003

நோய் தீர்க்கும் ஒரு விசேட குளியல்

இந்த வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிசச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது.

டீன் ஏஜ் பெண்களாகட்டும்... நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை!

அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.

இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்... உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்னைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!

இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!

இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள்.

இடுப்புக் குளியலை எப்படி வீட்டிலேயே செய்வது என்று வாசகிகளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவரான டாக்டர். மங்கை.

‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். ‘அதையெல்லாம் வாங்குவதற்கு முந்நூறு நானூறு ரூபாய்க்கும் மேல செலவாகுமே...’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மேலே சொன்ன பிரச்னைகளுக்காக ஊசிகள், மருந்துகள், டெஸ்டுகள் என்று ஒவ்வொரு தரமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவழிக்கும் போது, இந்தச் செலவு மிகச் சிறிய செலவுதான்.

தவிர, ஒருமுறை வாங்கி வைத்துவிட்டால் அதைப் பல மாதங்கள், ஏன் வருடங்கள்கூட உபயோகிக்க முடியும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கூட உபயோகிக்க முடியும்!

இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.

பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்... இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்!

குளிர்ந்த நீர் இடுப்புக் குளியல்
உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள் ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல... பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.

இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

வெந்நீர் இடுப்புக் குளியல்
இந்தக் குளியலில், உடல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரின் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் குளியலில் தொப்புளில் இருந்து தொடைகள்வரை நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி, அமரும் முறை, தேய்த்து விடுதல் எல்லாமே முன்னர் சொன்னது போலத்தான்.

மாதவிலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாதவிலக்குக் கோளாறு உள்ளவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வருவது தாமதமாதல், மாதவிலக்கின்போது வலி அதிகம் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வகைக் குளியல் நல்ல பலனைத் தரும்.

சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்கும் இதே முறைதான்.

ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. குளிர்ந்த நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் வெந்நீரில், ஒருமுறை சாதாரணக் குளியல் குளித்து விடுங்கள். அதேபோல, வெந்நீர் அல்லது சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில், வெறுமனே சாதாரணக் குளியல் குளிக்க வேண்டும்.

இடுப்புக் குளியலுக்குப் பின், பப்பாளி, மாதுளை மற்றும் பப்பாளி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பத்து வயது முதலே பெண்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். எந்தெந்த நேரங்களில் இந்த இடுப்புக் குளியல் குளிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிலக்கின் போதும், கர்ப்பக் காலத்தின் போதும் இடுப்புக் குளியலை மேற்கொள்ளக் கூடாது. அதேபோல இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் இடுப்புக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

இக்குளியலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், வெந்நீரின் வெப்பம் எவ்வளவு இருக்கலாம் என்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறும். அதனால், முதல்முறை இடுப்புக் குளியல் செய்யும்போது மட்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள்!’’

மு. சாமுண்டீஸ்வரி
நன்றி - குமுதம்

Dienstag, Oktober 28, 2003

நிஜ பிரசவவலியைத் தெரிந்து கொள்வது எப்படி?

கர்ப்பகாலத்தின்போது இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாய் பிறக்கும் என்று சில வீடுகளில் சொல்வார்கள். எங்கே குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று பயந்தே பெரும்பாலான பெண்கள் இதனால் இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். இது ரொம்பவும் தவறு.
நம்மூர்ப் பெண்களுக்கு - அனீமியா - என்று அழைக்கப்படும் ரத்தசோகை நோய் மிகவும் பரவலாக இருக்கிறது. இது இரும்புச் சத்து குறைவால் ஏற்படுகிறது. வேறு பல வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை. காரணம் அவர்கள் தங்கள் உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியே சத்துக் குறைவு இருந்தால் அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு அதை உடனடியாக சரி செய்து கொள்கின்றனர்.
எதனால் இந்த இரும்புச் சத்து தேவை என்பதைப் பார்ப்போம்.. நம் உடலில் இரும்புச் சத்து குறையும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற ஒரு பொருள் குறைந்துவிடுகிறது. இந்த ஹீமோகுளோபின்தான் பிராணவாயுவை உடலில் எல்லா பகுதிகளுக்கும் சமமாக எடுத்துச் செல்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் அளவு ஒருவருக்கு குறையும்போது உடலின் பல்வேறு பாகங்களுக்கு பிராணவாயு சரிவர கிடைக்காமல் போகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் Heart failier கூட ஆகலாம்.

இரும்புச் சத்து குறைபாடு உள்ள சாதாரண பெண்களுக்கே இப்படியென்றால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ ஹீமோகுளோபின் அளவு குறைவதோடு உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து அவருடைய உடம்பு பலவீனமடைவதோடு உள்ளிருக்கும் குழந்தையும் பலவீனமடைகிறது. மேலும் மேற்சொன்ன மூச்சுத்திணறல் பிரச்னைகளும் ஏற்படும். அதனால் இரும்புச் சத்து குறைவாக உள்ள எல்லாப் பெண்களுமே உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்றால் ரத்தசோகை இருக்கிறதோ இல்லையோ.. அவர்கள் பேறு காலம் முழுவதுக்குமே இரும்புச் சத்து மாத்திரைகளைக் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று இந்த விஷயத்தில் பயப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. குழந்தை எந்த நிறத்தில் பிறக்கும் என்பது மரபு வழியாக தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதால் எல்லாம் சிவப்பாகப் பிறக்கவேண்டிய குழந்தை தடாலடியாகக் கறுப்பாக மாறிவிடாது. கர்ப்பகாலத்தின் போது மாம்பழம் போன்ற வேறு பல விஷயங்களை சாப்பிட்டாலும் குழந்தை கறுப்பாகிவிடும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை. அதேபோல குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற நம்பிக்கையும் பொய்.

சிலர் இரும்புச் சத்து மாத்திரைகளைப் பேறு காலத்தின் ஆரம்பத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்து எட்டாவது மாதம் போல நிறுத்தி விடுகிறார்கள். கேட்டால் - இதுக்கு மேல மாத்திரை கொடுத்தா குழந்தையோட சைஸ் பெரிசாகி, சிசேரியன் பண்ணி எடுக்க வேண்டியதாகிவிடும்...- என்கிறார்கள். இந்த நம்பிக்கையும் தவறுதான். இவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் எடுத்துக் கொள்வது எந்த உணவாகவோ மாத்திரையாகவோ இருந்தாலும் அதில் தனக்குத் தேவையான சத்துக்களை மட்டுமே நம்முடைய உடல் உறிஞ்சுக் கொள்ளும். மீதமுள்ளவை வேறு பல வழிகளில் உடலிலிருந்து வெளியேற்றப் பட்டுவிடும். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

பிரசவத்தின்போது பெண்களுக்கு ரத்த இழப்பு அதிகமாக ஏற்படும். நோர்மல் பிரசவத்தின் போது 500 மில்லி அளவு (அல்லது அதற்கு மேலும்) சிசேரியனின் போது 1000 மில்லி அளவு வரைக்கும் (அல்லது அதற்கு மேலும்) ஒரு பெண்ணுக்கு இரத்த இழப்பு ஏற்படலாம். இது நார்மலான ஒரு விஷயம். இந்த இழப்பை ஈடுசெய்யவும், குழந்தை பிறந்ததும் அதற்கு பாலூட்டவும் தாய்க்கு இரும்புச் சத்து அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பேறுகாலத்தின்போது தாய் தொடர்ந்து சாப்பிட்டு வந்த இரும்புச் சத்து மாத்திரைகள்தான் இந்த நேரங்களில் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு இரும்புச் சத்து எவ்வளவு அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

ஓ.கே. இனி பிரசவத்துக்கு நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...
36 வாரங்கள் ஆனதும் தாய் பிரசவத்துக்குத் தயாராகிவிடவேண்டும். முதலில் பிரசவத்துக்கு மனதளவில் தாய் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவருக்கு முக்கிய பங்குண்டு. - எந்த சந்தர்ப்பத்திலும் உனக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்..- என்று ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கைக் கொடுக்க இவர்கள் தவறக்கூடாது. இதுவே பாதி பிரச்னையைத் தீர்த்துவிடும்.

சிலர் வேலை காரணமாக தங்கள் குடும்பங்களைவிட்டு வெகுதூரத்தில் செட்டிலாகி இருப்பார்கள். இவர்களுடைய தாயோ அல்லது மாமியாரோ பிரசவத்தின் போதுதான் ஊருக்கே வரமுடியும் என்கிற நிலையில் இருக்கலாம். இப்படி அத்தனை உதவி இல்லாத பெண்களுக்கு உதவுவதற்காகவே சில மருத்துவர்கள் Prenatal வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பிரசவம் பற்றிய பயத்தைப் போக்குவது தொடங்கி அதற்கு எப்படியெல்லாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்வது மற்றும் பிரசவத்தை சுலபமாக்க சில பிரத்தியேக பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பது என்று இந்த வகுப்புகள் மிக உபயோகமாக இருக்கும். இதுபற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வீட்டில் பெரியவர்களின் உதவி இல்லாதவர்கள் இந்த Prenatal வகுப்புகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தால் பிரசவத்தை positive ஆக எதிர்கொள்ளலாம்.

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் எப்போது என்பது மகேசனுக்கு மட்டுமே தெரியும் என்பார்கள்! உண்மைதான். தாய்க்கு எப்போது பிரசவ வலி ஏற்படும் என்று சொல்வது மிகக் கடினம்! அதனால் பிரசவத்துக்கு தேவையான மெட்டர்னிட்டி பையை கர்ப்பமான பெண்கள் முன்கூட்டியே ரெடி செய்து கொள்ளவேண்டும். அதில் தனக்கான நைட்டி, சோப்பு சீப்பு முதலிய அத்தனை விஷயங்களையும், குழந்தைக்கு ஏற்கனவே வாங்கி வைத்த நாப்கின்கள் முதலானவற்றையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பையைத் தாய் தயார் செய்வதற்கு முன்னரே ஒரு மினி ஷொப்பிங் சென்று வருவது நல்லது. அப்போதுதான் குழந்தைக்கான சோப்பு, எண்ணெய், ஷாம்பு, சொக்ஸ், உடைகள், கொசுவலை ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வாங்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு சில மாதங்கள் வரைக்கும் தாய் வெளியே செல்ல முடியாது என்பதால்தான் முன்பாகவே இதுபோல ஷாப்பிங் சென்று வரவேண்டும் என்கிறேன். என்ன இருந்தாலும் தாய் தன் பட்டுக்குட்டிக்காக பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் பொருள்களைப் போல மற்றவர்கள் (அது கணவராகவே இருந்தாலும்...) வாங்கி வரும் பொருட்கள் இருக்காதில்லையா..

36 வாரங்களானதும் மருத்துவர், தாய்க்கு பிரசவவலிக்கான அறிகுறிகள் என்னென்ன, எதுபோன்ற வலியெடுத்தால் உடனே தன்னைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக சொல்லிக்கொடுப்பார்.
முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு (ஏன் சில சமயங்களில் ஏற்கனவே பிரசவமானவர்களுக்கும் கூட) நிஜ பிரசவவலி எதுவென்று சரியாக சொல்லத்தெரியாது. பிரசவத்துக்கு முன் வரக்கூடிய சில இயல்பான வலிகளை (இதை ஆங்கிலத்தில் false Pain என்போம்) பிரசவ வலி என்று நினைத்துப் பதறிப்போய் மருத்துவமனைக்கு அரக்கப்பரக்க வந்துவிடுவார்கள். பிரசவவலி எது என்பது சரியாகத் தெரியாததால் அந்தப் பெண்களுக்கும் அவஸ்தை. அவருடன் வரும் பிறருக்கும், ஏன், மருத்துவருக்கும் அவஸ்தைதான்.

அப்போ நிஜ வலியை எப்படித்தான் கண்டு பிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குப் பிரசவலி போலவே தெரியக்கூடிய வலிகள் - False Pain - பற்றி முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதில் இரண்டு வகையுண்டு.
பேறுகாலம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் பின் தலை, தாயின் இடுப்பு எலும்பில் பொதியும். முதல் பிரசவத்தை எதிர் கொள்பவர்களுக்கு இது 34-35 வாரத்துக்குள் நிகழும். மற்றவர்களுக்கு பிரசவவலி எடுக்கும் சமயத்தில் இது பெரும்பாலும் நிகழலாம். இப்படி இடுப்பு எலும்பில் குழந்தையின் தலை பொதியும் போது வலி ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Head fitting Pain என்போம். முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண், இதுதான் பிரசவ வலியோ என்று நினைத்து பயந்துவிடுவார். இது ஒரு வகை false Pain.

இரண்டாம் வகை வலி, பிரசவத்துக்கான நாள் நெருங்க நெருங்க வரலாம். இந்த வகை வலி இடைவெளி விட்டுவிட்டு வரும். இதில் சில நொடி வலிக்குப் பிறகு சாதரணமாகி விடுவார்கள். இதை Practice Contraction என்போம். அதாவது, பிரசவத்துக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள நம்முடைய கர்ப்பப்பை Practice செய்கிறது என்போம். பேறு காலம் நெருங்கத் தொடங்கியதுமே கர்ப்பமடைந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இப்படி அடிக்கடி சுருங்கி விரியத் தொடங்கும். அந்த சமயத்தில், பீரியட்ஸின்போது ஏற்படும் வலி போன்றதொரு வலி ஏற்படுவதாக சொல்வார்கள். ஆனால் இதுவும் false Pain தான்.

இதுபோன்ற வலி வரும்போது சம்பந்தப்பட்ட பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன்னைத்தானே 2-3 மணி நேரத்துக்குக் கண்காணித்துக் கொள்ளவேண்டும். எத்தனை நேர இடைவெளி விட்டு வலி வருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். நிஜப் பிரசவ வலி ஏற்படும் சமயத்தில் இரண்டு வலிகளுக்கு இடையேயான நேர அளவு குறையத் தொடங்கும். அதேபோல நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போகும். கர்ப்பமுற்ற பெண் தன்னைத்தானே அமைதியாகக் கண்காணிக்கும்போதுதான் இது தெரியும்.

ஜி. கிருஷ்ணகுமாரி
நன்றி - குமுதம்

Freitag, Oktober 03, 2003

வலியில்லாத பிரசவம்!

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க
முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே
இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற
மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது.
எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.

பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

1. குழந்தையின் எடை.

2. கருவறையில் குழந்தையின் நிலை.

3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.

4. சுருங்கும் தன்மையின் வலிமை.

5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு - என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார் கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் 'எபிடியூரல் டெலிவரி' என்பது! இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..

'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.


ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.

எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

''இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.

''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே? இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா?

''பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

எபிடியூரல் அனெஸ்தீஸியா' மூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்...

''பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!''

இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் 'எபிடியூரல் அனெஸ்தீஸியா' மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது...

டாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.

டாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.

- பவள சங்கரி
படங்கள்: சோனா ராஜ்

nantri - Kumutham

Dienstag, August 26, 2003

ஆரோக்கியமான கர்ப்பகாலம்

ஆக்கம்:- டாக்டர் சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: டாக்கர் நிலானி நக்கீரன்


ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்சைனைகள் இல்லாமல் கற்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்சனைகளைத்தடுக்கலாம்.

கற்பகலாம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.
(இவை துண்டு பிரசுரத்தில் இருந்து சேர்க்கப்ட்ட தகவல்கள் )

1. சமவீத உணவை உட்கொள்ளல்:பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. போலிக் அமிலம் மாத்திரைகள்:
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:
சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:
கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்
இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

8. பரிசோதனை நேரம்:
கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

10. புகை பிடித்தலை தவிர்த்தல்:
எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

மேலும் சில துணுக்குகள்:
1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.

4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.

5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

ஆணின் பங்கு என்ன?ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆக்கம்:- டாக்டர் சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: டாக்கர் நிலானி நக்கீரன்
நன்றி:-வடலி சஞ்சிகை-UK

Samstag, August 23, 2003

மகளிர் திரிசங்கு நிலை - மார்பகப் புற்றுநோய்

ஆக்கம்: டாக்டர்.சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: சி.ஆர்.ஜோசப்


மார்பகப்புற்றுநோயால் பீடிக்கப்பட்ட 50 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் எனது ஆதரவு கோரி என்னை அண்டினார். அவர் முன்பு எதுவித நோயாலும் பீடிக்கப்படாது சுகதேகியாக இருந்தார். அவருக்குப் புற்றுநோய் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் எமது சìத்தில் உள்ள எத்தனையோ பெண்கள் தங்களைக் கிரமமான மார்பகப் பரிசோதனைக்கு அல்லது மார்பகஆய்வுக்கு (Mammogram) உட்படுத்தாமை எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மேலைத்தேசங்களில் உள்ள அநேகத் தமிழ்ப் பெண்கள் 50 வயதை எய்துகிறதினால் தங்களைத் தேசீகத் திரையிடல் நெறிக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள். இதனால் இவர்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை மார்பக ஆய்வுப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இது மார்ப்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து சிகிச்சை முறைகளைக் கைக்கொள்ள உதவும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூச்சமடையாது இதில் ஈடுபட வேண்டும். சாதாரண வினாவிடைகள் கீழ்தரப்பட்டுள்ளன.

இது என்ன?
மார்புத்திசுக்களில் உண்டாகும் ஓர் அபாய வளர்ச்சியே மார்புப்புற்றுநோய்.

இது யாருக்கு உண்டாகிறது?
ஐக்கிய இராச்சியத்தில் 12ல் ஒருவர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். முதன்மையாக இது முதுபெண்களின் நோயாக இருந்தபோதிலும், இது எல்லா வயதினரையும் தாக்கக்கூடும். மார்ப்புப்புற்றுநோயால் தாக்கப்படுபவரில் 1% மானவர்கள் ஆண்கள். ஒரு குடும்பத்தில் ஒருவரோ அல்லது பலரோ இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் இது மற்றோருக்குப் பரவும் அபாயம் அதிகமாகும். பிள்ளைகள் இல்லாதிருந்தாலோ, முதற்பிள்ளை பிந்திப் பிறந்தாலோ, அல்லது முலைåட்டாதிருந்தாலோ இந்த நோய் உண்டாவதற்குச் சாதகமாயிருக்கும். சுரப்புகள் மாற்றுச் சிகிச்சை பெற்றாலும் சிலவருடங்களின் பின் இந்த நோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கும். புகைப்பிடித்தல், நீடியகாலம் மார்பகத்தில் கொப்பளங்கள் காணப்படுவதினாலும் இந்த நோய் உண்டாகலாம்.

அறிகுறிகள் என்ன?
அதிக பெண்களுக்கு மார்பகத்தில் கடினமான கல் போன்ற நோவில்லாத கட்டிகள் காணப்படலாம். மார்ப்புப்பகுதியில் தோல் பள்ளம் விழுந்து உள் இழுபடுவது போல் காணப்படலாம். முலைக்காம்பில் இரத்தக்கறையுடைய வெளியேற்றம் காணப்படுதலும் எச்சரிக்கை அறிகுறிகளாகும். மார்பகத்தில் நோவு, குறிப்பாக மாதவிடாயின் போது உண்டாவது கவலைகுரியதல்ல. பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பரிசீலித்து இவ்வித மாற்றங்கள் இருப்பின் பொது வைத்தியரின் (G.P) ஆலோசனை விரைவில் பெற வேண்டும்.

எனது வைத்தியர் என்ன செய்வார்?
அவர் உம்மை வினாவி உமது மார்பகங்களைப் பரிசோதிப்பார். அறிகுறிகள் தோன்றுமாயின் உம்மை மார்பாய்வு (Mammogram) என்னும் ஓ கதிரியக்கப் பரிசோதனைக்கு அல்லது வைத்தியசாலை மார்புச்சிகிச்சை நிபுணரிடம் அனுப்புவார்.

எவ்வித சிகிச்சை முறைக்கு நான் உட்படுத்தப்படுவேன்?
வைத்தியசாலை ஆலோசகர் உமக்கு புற்றுநோய் உண்டா என்று அறிய உமது மார்பகத்திசுவின் ஓர் மாதிரியயை எடுப்பார். இதைச் செய்வதற்கு உம்மை வெளிநோயாளியாகவோ அல்லது உடனுக்குடன் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தவோ கூடும். கட்டியை அல்லது மார்பகத்தின் ஒரு பகுதியை அகற்றுதல் மார்புப்புற்றுநோயின் சிகிச்சை முறையாகும். நோய் பரவியிருக்கிறதா,என அறிய அவர்கள் கமக்கட்டில் சில சுரப்பிகளையும் அகற்றலாம். அறவைசிகிச்சைக்கு முதல் மார்பு ஓ கதிர் பரிசோதனையும் இரத்தப் பரிசோதனையும் செய்வது வழக்கம். இவற்றின் ìலம் நோய் சுவாசப்பைக்களுக்கு அல்லது ஈரலுக்குப் பரவியுள்ளதா என்பதையும் அறியலாம்.

அறுவைச் சிகிச்சையின் பின் நீர் கதிரியக்க (Radio Therapy) முறைக்கு அனுப்பப்படுவீர். இது அதிக வலுவுள்ள X கதிராக மார்பகத்தில் செலுத்தப்படுதலால் அங்குள்ள மீதமான நோய்க்கலங்களை அகற்கிறது. உமக்கு Tamosxcifen எனும் வில்லைகளும் தரப்படலாம். சில மார்புப் புற்றுநோய் இனங்கள் Oestrogen சுரப்பைக்காவக் கூடிய உள்வாங்கிகளைக் கொண்டவையாகும். இந்த வில்லைகள் உள்வாங்கிகளை அடைத்து புற்றுநோய் கலங்கள் பிரிவதை தடுக்கின்றன. நோயின் வகையையும் பரவுதலையும் பொறுத்து சில பெண்களுக்கு Chemothreapy போன்ற வேறுவகை மருந்து வகைகளும் தேவைப்படும். மார்புப்புற்றுநோய் உடைய பெண்கள் ஆரம்ப சிகிச்சைமுதல் பலவருடங்களுக்கு கிரமமான இடைவெளியில் அவதானிக்கப்படுவார்கள்.

சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?
என்ன வயதினராய் இருந்தாலும் உமது மார்பகங்களை நீர் கிரமமாக சுய-பரிசோதனை செய்தல் இன்றியமையாததாகும். கட்டிகள் தோல் மாற்றங்கள் முலைக்காம்புக் கசிவு என்பன ஒர் வைத்தியரால் பரிசோதிக்கப்பட வேண்டியவையாகும். உமது குடும்பத்தில் மிக நெருங்கிய தாய் சகோதரி யாருக்காவது மார்புப் புற்று நோயின் அறிகுறிகள் கணப்பட்டால் அதை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும் நீர் பிள்ளைகள் உடைய இளம் பெண்ணாக இருந்தால் உமது பிள்ளைக்குத் தாய்பாலூட்ட தெண்டிக்க வேண்டும். ஆது பிள்ளைக்கு போசனையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதோடு உமக்கும் காப்பரணாக அமைந்து எதிர் காலத்தில் இவ்நோய் வராதிருக்க உதவும்.

நீர் 50 வயதை அடையும் போது தேசீக மார்பகத்திரையில் நெரியால் நடாத்தப்படும் மார்பக ஆய்வு பரிசோதனைக்கு 3வருடங்களுக் ஒரு முறை உம்மை உள்படுத்த வேண்டும். நீர் அழைக்கப்படாவிட்டால் அதை உமது பொது வைத்தியரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஆக்கம்: டாக்டர்.சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: சி.ஆர்.ஜோசப்
நன்றி:-வடலி சஞ்சிகை
ஓக்டோபர் 2001