Sonntag, September 12, 2004

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு

Dr . Jeyasiri Gayaraj

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை... உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!

இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்.

நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப்பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது... அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.

தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அவர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.
உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்துவிடும். அந்தச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு.
இப்படி அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன..?
தாயின் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந் தாலும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.

இப்படி ஆகும் போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்.
பிரசவமான பெண்களுக்கு மிகவும் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என்கிற நிலை ஏற்படுவதுண்டு. (இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)

இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.
சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக்கிறோம். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.
சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக் கொன்றுவிடும் அளவுக்கேகூடச் செல்வார்கள்!
தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டி வரலாம்..

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற்படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை.. இது சாதாரண விஷயம்தான்.

கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அந்தச் சமயத்தில்தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டுவர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.

கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரிதாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந்துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாகத் தொங்கினாற்போல காட்சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டால் தாயின் மார்பகம் நிரந்தரமாகவே தொங்கிப் போய்விடும் வாய்ப்புள்ளது.

கனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவது நல்லது. அதுவும் தனக்கு சரியான அளவிலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொருமுறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். இவர்கள் சாதாரண பிரா அணியாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக்கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணியலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.

கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.

இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே...’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?
குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.

Nantri - Kumutham sinehithi

Samstag, September 11, 2004

மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்?

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

மார்பில் வலி தோன்றுவது ஏன் என மருத்துவர்களுக்கே சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோலேக்டின் அளவில் மாற்றம் இருப்பதால் மார்பு வலி வருவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

இச்சமயத்தில் மார்புகள் திரவங்களை அதிகமாக கிரகித்து தன் வசம் வைத்து கொள்வதால் மார்பு வீங்குகிறது. மாதவிடாயின்போது மார்பில் உள்ள பால் சுரப்பிகளிடம் புதுப்புது செல்கள் அதிகரிப்பதால் மார்பு வீங்கி மிகவும் மென்மையாகி-விடுகிறது. சிறு ஸ்பரிசம்கூட வேதனையாகி விடுகிறது.

இவ்வலியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க இதோ சில வழிகள்..... முதலில் உள்ளாடையை (ப்ரா) சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். உறுதுணையாக இருக்கும் உள்ளாடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் பாதி வலி குறைந்த மாதிரி. அவை இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மார்புக்கு கச்சிதமாக இருந்தால் வயை குறையும்.

மார்பு வலி அதிகரித்தால் ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை ஒரு துவாலையில் சுற்றி மார்புக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை லேசான ஒத்தடம் கொடுக்கலாம். இது தண்ணீர் மற்றும் திரவங்கள் மார்புக்கு சென்றடைவதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்கும்.

மற்றொரு பரிகாரம் நம் உணவில்தான் உள்ளது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ட்ரோஜன் கட்டுப்பாட்டில் இருக்கும். மார்பு வலியும் குறையும் வாய்ப்புண்டு.

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் மார்பு வலி நீங்கும். உப்பு அதிகம் சேர்ப்பதினால் உடலில் திரவ அளவு உயர்கிறது. அதனால் மார்பு வீங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவையும் நாம் நிராகரித்தால் நெஞ்சுவலி மட்டுமல்ல, மார்பு வலிக்கும் விடை தரலாம். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் உடல் பருமனை அதிகரிப்பதால் நம் உடலால் ஈஸ்ட்ரோஜனை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போகிறது. அதனால் கொழுப்பு இல்லாத உப்புக் குறைவான நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பழக்கத்தை அனுசரித்தால் மார்பு வலி போயே போச்சு!

நிதர்ஷனி