Montag, Februar 09, 2004

குழந்தையில்லாக் குறை - ஆண்களே அதிக பட்சக் காரணம்

கல்யாணமாகி நாலு வருஷமாச்சு!.. உனக்குத்தான் ஒரு குழந்தையைப் பெத்துதர துப்பில்லையே... என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்!’’ என்று இன்னமும்கூட பல குடும்பங்களில் பெண்ணைப் பார்த்துதான் முதல் ஈட்டி பாய்ச்சப்படுகிறது!

குழந்தை இல்லை என்றால் உடனே பெண்கள்தான் அதற்குக் காரணம் என்ற போக்கு, படிக்காத பாமரர்கள் மத்தியில்தான் என்றில்லை... படித்தவர்கள் மத்தியில்கூட இந்த எண்ணம் சட்டென்று நீக்க முடியாத அளவில் ஆழப் பதிந்து போயிருக்கிறது.

இருவரில் யார் வேண்டுமானாலும் இந்தக் குறைக்குக் காரணமாக இருக்க முடியும் என்ற விஷயமே இரண்டாவது சிந்தனையாகத்தான் ஏற்படுகிறது. அதுவும்கூட ஓரளவு படித்த, விஷயங்கள் புரிந்த சிலருக்குத்தான். குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாதததற்கு காரணமான பிரச்னைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதிக்குப் பாதி என்று ஏற்கெனவே மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தது.

சமீபகாலங்களில் இந்த சதவிகிதம் ஆண்களுக்கு பெண்களைவிட கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் அதிகமாகி இருப்பதாகத் தனது மருத்துவ அனுபவங்களின் மூலம் தெரிவிக்கிறார் டாக்டர் வி.ஜமுனா.

‘‘உண்மைதான். இந்தப் பிரச்னை இப்போதல்ல.. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே மிக அதிகரித்து வருகிறது. காரணம் மாறி வரும் நமது வாழ்க்கை முறைதான்!’’ என்கிறார் அவர்.

இதெல்லாம் ஆண்கள் பிரச்னை’ என்று வெளியே சில பிரச்னைகள் தெரியாததற்குக் காரணமே சில பெண்கள்தான். குறை தங்கள் கணவரிடம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள் என்பது இவரது கருத்து

‘கணவருக்கு குறையிருந்தால்கூட எங்க குடும்பத்தில் வேற யாருக்கும் இது தெரிய வேண்டாம்’ என்று பெண்களே நினைக்கிறார்கள். கணவர்கள் இந்த விஷயத்தில் கஷ்டப்படக்கூடாதென்று மனைவிகள் இரட்டைக் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிறது’’ என்று சொல்கிறார் இவர்.

ஊசிகளோ, ரத்தமோ இல்லாத இவருடைய சித்தமருத்துவ சிகிச்சையினால் இதுவரை பிறந்த குழந்தைகள் கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூறு பேர். தமிழகத்தில் மட்டுமல்ல... பாகிஸ்தான், ஈராக், மலேசியா, சிங்கப்பூர், என்று உலகம் முழுக்க இந்தக் குழந்தைகள் இருக்கிறார்களாம். இத்தனை குழந்தைகளின் பெற்றோருக்கும் இவர் கொடுத்த சிகிச்சையில் கண்டறிந்த முடிவுதான் மேலே சொன்னது.

அது சரி... குழந்தையின்மைக்கான ஆண்களின் குறை ஏன் அதிகமாகிக் கொண்டு போகிறது?
முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடைப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நம் லைஃப் ஸ்டைலில் நாம் புதிதாக கடைப்பிடிக்கும் விஷயங்கள் ஆண்களுக்கு எந்தக் குறையை அதிகமாக்குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்’’ .

பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணுக்கள் எண்ணிக்கைக் குறைவுதான். ஒரு ஆணுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இருக்க வேண்டும். இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்கள், இந்த எண்ணிக்கையில் எழுபது சதவிகிதமாவது இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கு குழந்தை தர முடியும்!

சில ஆண்களுக்கு விந்துத் திரவமே உற்பத்தி ஆகாமல் இருக்கக்கூடும். இந்நிலையை ஆஸ்பெர்மியா (Aspermia) என்று அழைக்கிறோம்.

அது எப்படி ஒரு ஆணுக்கு வயதுக்கு வந்த பின்னரும் அதாவது டீன்ஏஜ் நிலை கடந்த பின்னரும் விந்துத் திரவம் உற்பத்தி ஆகாமலே போகும் என்று நீங்கள் சந்தேகம் கேட்கலாம். நியாயமான சந்தேகம்தான்.

குழந்தைப் பருவத்திலேயே புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்கியவர்களுக்கு விதைகள் செயலற்றுப் போய் விந்துத் திரவத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போகும்.

இன்னும் சிலருக்கு விந்துத் திரவம் உற்பத்தியாகும்... ஆனால் விந்துத் திரவத்தில் உயிரணு ஒன்றுகூட இல்லாமல் இருக்கும். இப்படி உயிரணு அறவே இல்லாமல் பூஜ்யமாக இருந்தால் அந்தக் குறைபாட்டுக்கு அஜுஸ்பெர்மியா என்று பெயர். (Azoospermia)

இன்னும் சிலருக்கோ விந்துத் திரவத்தில் உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும். இந்த எண்ணிக்கையைக் கொண்டு ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்ய முடியாது. இந்நிலைக்கு ‘யெலிகூஸ்பெர்மியா’ (Eligoospermia) என்று பெயர்.

யாருக்காவது விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவுக்கும் குறைவாக இருந்து, அவை நீந்துகின்ற தன்மையையும் குறைவாகக்கொண்டு இருந்தால் அதை ‘ஒலிகோஸ்பெர்மியா’ (Oligospermia) என்று கூறலாம்.

விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை ஓரளவே குறைவாக இருந்தால் அது ‘மைல்டு ஒல்கோஸ்பெர்மியா.’ அதேபோல விந்தில் உயிரணுக்களும், செத்துப்போன அணுக்களும் சமநிலையில் இருக்கும் நிலையை ‘மிடில் ஒலிகோஸ்பெர்மியா’ என்போம்.

விந்துத்திரவத்தில் உயிரணுக்கள் மிகக் குறைவாக இருந்து, இறந்துபோன அணுக்களே அதிகம் இருந்தால் அது, ‘சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ எனப்படும். ஒரு சிலருக்கு விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை விரல்விட்டே எண்ணுகிற அளவுக்கு இருந்து, பிற அனைத்துமே செத்துப்போன அணுக்களாக இருக்கும். அந்நிலையை ‘வெரி சிவியர் ஒலிகோஸ்பெர்மியா’ என்கிறோம்.

சிலருக்கு விந்தில் தேவையான அளவுக்கு உயிரணுக்கள் இருக்கும். ஆனால் அவை நீந்துகிறத் தன்மை மிகக்குறைவாக இருக்கும். (கரு உருவாக நீந்தும் தன்மை முக்கியம்) இது ‘ஆஸ்தெனோஸ்பெர்மியா’ (Asthenospermia).

விந்துத் திரவத்தில் சீழ் அல்லது ரத்தத்தின் வெள்ளை அணுக்களும் கலந்து இருந்தால் அது ‘பயோஸ்பெர்மியா’ (pyospermia)

உயிரணுக்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தால் அது ‘யூடூஸ்பெர்மியா.’

உயிரணுக்கள் படிகங்கள் போலக் காணப்படுகிற நிலை இருந்தால் அது ‘கிரிஸ்டோலஸ்பெர்மியா’ (Crystolospermia).

உயிரணுக்களை வளமாகச் செய்யவேண்டிய மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), வைட்டமின்_ஈ போன்றவை குறைவாக இருந்தால் அது ‘யெனிலோஸ்பெர்மியா’ (Anylospermia).

முறையற்ற செக்ஸ் உறவின் காரணமாக ஆணுக்கு கொனோரியா எனும் பால்வினை நோய் வந்திருந்து உயிரணுக்கள் கருத்தரிக்கச் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அது ‘ஹீமோஸ்பெர்மியா’ (Haemoespermia).

விந்தில் உள்ள உயிரணுக்கள் அனைத்துமே இறந்த அணுக்களாக இருந்தால் அந்நிலை ‘நெக்ரோஸ்பெர்மியா’ (Necrozopermia) எனப்படும்.

மேலே குறிப்பிட்டவற்றில் ஆண்களிடம் அதிகமாக இருக்கும் குறை ‘ஒலிகோஸ்மியா’ என்ற நிலைதான்.

ஒருவேளை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக டெஸ்டுகள் சொன்னாலும்கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப் பொறுத்துதான் குழந்தை உருவாகிறது. உயிரணுக்களின் வீரியத்தை வைத்து, அசையாத தன்மையுள்ள உயிரணுக்கள், வால் மட்டும் அசைக்கும் உயிரணுக்கள், வேகமற்ற உயிரணுக்கள், வேகமான உயிரணுக்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கிலும் முதல் இரண்டு வகை கொண்டவர்களால் தன் மனைவிக்குச் குழந்தை தர முடியாது (சிகிச்சைக்கு பின்பே முடியும்). மூன்றாவது வகை சிறிது கஷ்டம். நான்காவது வகைதான் தொட்டதும் பற்றிக் கொள்ளும்!’’ என்று தெளிவுப்படுத்துகிறார் டாக்டர் ஜமுனா.

சமீபகாலமாக ஆண்களின் குறை அதிகமாவதற்கு என்ன காரணம் என்றும் சொன்னார் அவர்:
‘இப்போதெல்லாம் பான், ஜர்தா போடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சிகரெட்டும் சரி, பான் போடுபவர்களும் சரி... புற்று நோய் போன்ற உடல்நலக் கேட்டுக்கு மட்டுமல்ல... ஆண் குறைகளுக்கும் ஆளாகிறார்கள். இதனால் உயிரணுக்கள் உற்பத்தியே இருபத்தி மூன்று சதவிகிதம் குறைகிறது. உயிரணுவின் வீரியம் (நீந்துகிற தன்மை) பதின்மூன்று சதவிகிதம் குறைகிறது. ஏன்... சில சமயம் உயிரணுக்களின் வடிவம்கூட சிதைந்து போவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

அதேபோல இன்று ஆண்கள் மதுபானம் அருந்தும் எண்ணிக்கையும் மிக அதிகமாகிவிட்டது. மதுபானங்கள் உயிரணுக்கள் உற்பத்தியிலேயே சிக்கல் ஏற்படுத்தி விடுகின்றன தெரியுமா?

ஆண்களின் குறைக்கு மிக முக்கியமான இன்னொரு காரணம் தொலைந்து போய்விட்ட நம் ‘மாரல்!’ அதாவது ‘இது ஒன்றும் பெரிய தப்பில்லை’ என்ற ரீதியில் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும் இடங்களில் ஏற்படும் செக்ஸ் ரீதியிலான அட்ஜெஸ்ட்மெண்டுகள்கூட உயிரணுக்களை முக்கியமாக பாதிக்கின்றன.

சமீப காலமாக சில பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்கள் பிரத்தியேக பகுதிகளில் வழவழப்பு ஏற்படுத்த வேண்டி கே.ஒய். ஜெல்லி, சர்க்கிலூப், லுபிபேகஸ் போன்ற ஜெல்லிகளை சகஜமாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் குழந்தை பெறாத பெண்கள் இவற்றை உபயோகிக்க வேண்டாம். காரணம், இதுபோன்ற ஜெல்லிகளுக்கு ஆண்களின் உயிரணுக்களை கொன்று விடுகிற ஆற்றல் உண்டு.

பொதுவாகவே தாம்பத்தியத்துக்கு முன்பு மனைவியை போர்பிளே எனப்படும் காதல் சில்மிஷங்கள் மூலம் உணர்வு மயமான சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றாலே போதும்... பிரத்தியேக பகுதிகள் நெகிழ்வுறும். அதனால் ஜெல்லி வேண்டாம்.

ஆண்கள், கட்டுமஸ்தான உடம்புக்காக அதிக எக்ஸர்ஸைஸ்... குறிப்பாக ‘சைக்கிளிங்’ செய்வதும் கூட இந்த விஷயத்தில் தப்புதான் தெரியுமா? (அளவான உடற்பயிற்சி எப்போதும் ஆபத்தில்லை) வாரத்துக்கு நூறு மைல் தொலைவு ஓடுவது, ஐம்பது மைல் தொலைவு சைக்கிள் ஓட்டுவது, மிக அதிக தூரம் டூவிலரில் உட்கார்ந்தபடியே போவது போன்றவைகூட உயிரணு உற்பத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

அதிக உஷ்ணமான சூழலில் வெகு நேரம் நிற்பது, அலுவலகத்தில் உஷ்ணமான இடத்தில் சேர்போட்டு அமர்வது அல்லது வெப்பம் கொப்பளிக்கும் மிஷின்கள் ஓடுமிடம், பாய்லர் போன்றவற்றின் அருகே மணிக்கணக்கில் நிற்பது, உணவு அல்லது தினசரி பழக்கவழக்கங்களால் உடலை அதிக சூடுக்கு உட்படுத்திக் கொள்வது போன்றவற்றை பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். அதிக வெந்நீரில் குளிப்பதைக்கூட தவிர்க்கலாம்.

கடைசியாக ஒரு மிக முக்கியமான விஷயம்.. தேவையில்லாமல் அடிக்கடி செயற்கை குளிர்பானங்கள், பிரிசர்வேடிவ் கலந்த உணவு வகைகள், பாஸ்ட் பூட்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதைக் தவிருங்கள். நல்ல சத்தான உணவை நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாலே இந்த ரசாயன உணவு வகைகள் சாப்பிடுவது குறையும். இவைகூட ஆண்களுக்கான மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்!’’ என்று சொல்கிறார் டாக்டர் ஜமுனா.

_ ஷக்தி
--------------------------------------------------------------------------------
பெண்களுக்கு என்னென்ன குறைகள்?
குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகள், சரியாக சினைமுட்டை சினைக்காத தன்மை மற்றும் மாத விலக்கு ஒழுங்கின்மை ஆகிய இரண்டும்தான். பத்து பெண்களில் ஐந்து பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கிறது.

பெண்களுக்கு சுரக்க வேண்டிய புரஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்கள் சரியாக சுரக்காததால் இந்தக் குறை ஏற்படுகிறது.

அடுத்த முக்கிய குறை, கர்ப்பப்பையிலும் அதன் சுவரை ஒட்டியும் ஏற்படும் கட்டிகளும் சினைப் பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளும்.

பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற ஊளைச் சதைகளும்கூட குழந்தை பிறக்காததுக்கு ஒரு காரணமாகிறது.

ஒரு சிறு எச்சரிக்கை:
கருக்குழாய் (பெலோபியன் டியூப்) அடைப்பு என்பது முன்பெல்லாம் மிகக் குறைவாக இருந்தது. தற்போது நம் தவறான வாழ்க்கை முறைகூட இதற்கு காரணமாகிறது. உதாரணமாக உடலுக்கு அதிக வேலை தராமல் இருக்கும்போது நம் உடலில் ஏற்படும் ஊளைச்சதைகள் கர்ப்பப் பையைச் சுற்றிலும் வளர்ந்து பின் கருக்குழாய் உள்ளேயும் போய் அடைகிறது.

இதற்கு முன்பு கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களுக்கோ அல்லது குழந்தையில்லா குறைக்காக அடிக்கடி டி அண்ட் ஸி செய்து கொள்பவர்களுக்கோ அந்த புண்கள் ஆறக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகளால் கருக்குழாய்களின் ஒரு முனையோ அல்லது இரு முனைகளோ மூடி விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

முதல் குழந்தை வேண்டாம் என்று நினைத்து கருச்சிதைவு செய்து கொள்ளும் சில தம்பதியர் மத்தியில் இந்தக் குறை அதிகம் ஏற்படுவதைக் காண்கிறேன். குழந்தை உருவாகாமல் இருக்க அவர்கள் கருத்தடுப்பு முறைகளை உபயோகித்தால் பிற்காலத்தில் குழந்தை இல்லாக் குறையால் தவிக்க வேண்டியதில்லை...

பெண்கள் காலதாமதமாக குழந்தை பெற நினைப்பதும் (35 வயதுக்கு மேல்) குழந்தையில்லா குறைக்கு ஒரு முக்கிய காரணம்!

சிலநேரம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்தக் குறையும் இருக்காது. அப்படியிருந்தும் குழந்தை பிறக்காமல் போவதுண்டு! இதற்கு சரியான சமயத்தில் அல்லது சரியான முறையில் உறவு கொள்ளாதது அல்லது டென்ஷன் என்று ஏதாவது காரணங்கள் இருக்கலாம்!
--------------------------------------------------------------------------------
இரண்டு சிறப்புகள்!

குழந்தைப் பிறப்புக்கான ஆண்கள் குறைகளில் மிக முக்கியமானது 'Nil Count' எனப்படும் ‘அஜுஸ்பெர்மியா, என்ற என்ற நிலை. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தில் செயற்கை கருவூட்டலுக்குத்தான் (அதிலும் குறிப்பாக பிற ஆண்களின் உயிரணுவைக்கொண்டு) முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்தக் குறையை தனது இந்திய மருத்துவத்தின் மூலம் பலருக்கு போக்கி வெற்றிகரமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தந்திருக்கிறார் ஜமுனா.

அதேபோல பெண்ணின் மிக முக்கியமான குறை பெலோபியன் குழாய்கள் அடைத்திருப்பது. பெலோபியன் குழாய்களின் வழியாகத்தான் உயிரணு, சினைமுட்டையைச் சேர்ந்து கருமுட்டையாக உருவாகிறது. கருவுருதலுக்கு இதுதான் மிக முக்கியம். ஆனால் சமயத்தில் சில பெண்களுக்கு இந்த இரண்டு பெலோபியன் குழாய்களுமே அடைத்துக் கொண்டிருக்கும். இவர்களும் செயற்கை கருவூட்டல் முறைக்கோ (டெஸ்ட் டியூப்பேபி) அல்லது பெலோபியன் குழாயில் செய்யப்படும் மைக்கோ சர்ஜரிக்கோதான் போக வேண்டும்.

இந்த இரண்டு முறைகளிலுமே வெற்றியின் சதவிகிதம் பத்து சதவிகிதத்துக்கு உள்ளேதான். (வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் கணக்குப்படி). அதிலும் குறைந்தது நாலைந்து முறை முயற்சித்தால் மட்டுமே. ஆனால் இந்தக் குறையுள்ள பெண்களுக்கு பக்க விளைவுகளற்ற சித்த மருத்துவம் மூலமே பெலோபியன் குழாய் அடைப்புகள் நீக்கி இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க வைக்கிறார் டாக்டர் ஜமுனா.

பல மருந்துகள் மனித வாழ்க்கையோடு, தாம்பத்யத்தோடு, கருவுறுதலோடு, இன்னபிற பிரச்னை களோடு அல்லவா விளையாடி விடுகின்றன. காரணம், ஆண் மலட்டுத்தன்மைக்கு இத்தகைய சில மருந்து மாத்திரைகளும் ஒரு காரணமாகி விடுகின்றன’’ என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் டாக்டர் ஜமுனா.

கீழே சொல்லப்பட்ட சில மருந்துகள் உயிரணு இயங்கும் தன்மையையே பாதிக்கின்றன என்கிறார்.
காளானுக்கு எதிரான ketoconazole மருந்து

குடல் அழற்சிக்கான Sulfasalazine மருந்து

Calcium Channel Blockers உயர்ரத்த அழுத்த மருந்து

Spironolactone இதுவும் உயர்ரத்த அழுத்த மருந்து

கீல்வாத மருந்தான Alloporinol

மற்றொரு கீல்வாத மருந்தான Colchicine

புற்றுநோய், சொரியாசிஸ், ஆர்த்ரிடீஸ்க்கான Methotrexateமருந்து.

குடல் புண் மருந்தான Cimetidine.

கவனிக்கவும்... இந்த மருந்துகள் ஆண்கள் உடலுறவு கொள்ளும் விஷயத்திலும்கூட குறைகளுக்கு வழி வகுத்து விடக்கூடும்.

Chlorpromazine, Haloperidol, Thioridazine, Amitriptyline, Imipramine, Fluoxetine (Prozac), Paroxetine (Paxil), Sertraline (Zoloft), Guanethidine, Prazosin, Phenozibenzamine, Phentolamine, Reserpine, Thazidess

இவை தவிர ஆண்டிபயாடிக் மருந்துகளான Nitrofuran, Erythromycin, Gentamicin போன்றவற்றால்கூட ஆண் உயிரணு உற்பத்தியோ, உயிரணு நீந்தும் தன்மையோ பாதிக்கப்படலாம்.

ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். மேலே கண்ட மருந்துகள், அதை உட்கொள்கிற எல்லோருக்குமே பிரச்னை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது. இவை ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணமாக அமைகின்றன என்பதைத்தான் என் அனுபவத்தில் நான் கண்டறிந்திருக்கிறேன்’’ என்கிறார் அவர்.

Keine Kommentare: