Samstag, September 11, 2004

மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்?

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அல்லது சில நாள்களுக்கு முன்போ மார்பில் வலி வருவது பெண்களுக்கு காலங்காலமாய் நிகழ்ந்து வந்த ஒன்று. சில பெண்களுக்கு தலைவலி, கால்வலி, முதுகுவலி போல் மார்பில் வலியும் மாதவிடாயின் வரவைக் குறிக்கும் ஒரு சிக்னல்தான் எனலாம். மாதா மாதம் தவறாது அழையாது வந்து போகும் இவ்வலியை பெண்கள் சகித்துக் கொள்வது நடைமுறை விஷயம். இதை பிரெஸ்ட் டென்டர்னஸ் (Breast Tenderness) என்பார்கள். இவ்வலியை ஒன்றும் செய்ய இயலாது என்று கருதியே பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் சில எளிய டிப்ஸ் மூலம் பெண்கள் இதை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பார்ப்போம்...

மார்பில் வலி தோன்றுவது ஏன் என மருத்துவர்களுக்கே சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோலேக்டின் அளவில் மாற்றம் இருப்பதால் மார்பு வலி வருவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

இச்சமயத்தில் மார்புகள் திரவங்களை அதிகமாக கிரகித்து தன் வசம் வைத்து கொள்வதால் மார்பு வீங்குகிறது. மாதவிடாயின்போது மார்பில் உள்ள பால் சுரப்பிகளிடம் புதுப்புது செல்கள் அதிகரிப்பதால் மார்பு வீங்கி மிகவும் மென்மையாகி-விடுகிறது. சிறு ஸ்பரிசம்கூட வேதனையாகி விடுகிறது.

இவ்வலியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும் அதன் தாக்கத்தைக் குறைக்க இதோ சில வழிகள்..... முதலில் உள்ளாடையை (ப்ரா) சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். உறுதுணையாக இருக்கும் உள்ளாடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் பாதி வலி குறைந்த மாதிரி. அவை இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. மார்புக்கு கச்சிதமாக இருந்தால் வயை குறையும்.

மார்பு வலி அதிகரித்தால் ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை ஒரு துவாலையில் சுற்றி மார்புக்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் வரை லேசான ஒத்தடம் கொடுக்கலாம். இது தண்ணீர் மற்றும் திரவங்கள் மார்புக்கு சென்றடைவதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்கும்.

மற்றொரு பரிகாரம் நம் உணவில்தான் உள்ளது. நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களை உட்கொண்டால் ரத்த ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ட்ரோஜன் கட்டுப்பாட்டில் இருக்கும். மார்பு வலியும் குறையும் வாய்ப்புண்டு.

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் மார்பு வலி நீங்கும். உப்பு அதிகம் சேர்ப்பதினால் உடலில் திரவ அளவு உயர்கிறது. அதனால் மார்பு வீங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவையும் நாம் நிராகரித்தால் நெஞ்சுவலி மட்டுமல்ல, மார்பு வலிக்கும் விடை தரலாம். கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் உடல் பருமனை அதிகரிப்பதால் நம் உடலால் ஈஸ்ட்ரோஜனை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போகிறது. அதனால் கொழுப்பு இல்லாத உப்புக் குறைவான நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பழக்கத்தை அனுசரித்தால் மார்பு வலி போயே போச்சு!

நிதர்ஷனி