Sonntag, Dezember 19, 2004

பாலூட்டும் தாய்மார் என்ன உணவுகளை உண்ணலாம்?

"பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணக் கூடாது. அப்படி கண்டதையும் உண்டால் பிள்ளைக்கு வயிற்றுளைவு, வயிற்றில் புண், தோல்வருத்தம், தேமல்.... போன்ற பல் வேறு வருத்தங்களும் உபாதைகளும் வரும்" என்ற பலமான நம்பிக்கையான கருத்து எம் மத்தியில் வேரூன்றி இருக்கின்றது. இது மிகவும் தப்பான கருத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.

பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணலாம்.

பண்பாட்டு ரீதியாக உட்கொள்ளும் உணவு வகைகளும், நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் பெரிதும் வேறு படுகின்றன. அதாவது ஒரு பாலூட்டும் ஐரோப்பியத்தாய் உண்ணும் உணவும், ஒரு பாலூட்டும் ஆசியத் தாய் உண்ணும் உணவும் வேறு வேறாகவே இருக்கின்றன. ஆனால் பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணலாம். எந்த உணவையும் தான் உண்ணக் கூடாது என ஒதுக்கி வைக்கக் கூடாது. தனக்குப் பிடித்தமான எல்லா உணவுகளையும் உண்ண வேண்டும்.

அதே நேரம் குழந்தைக்கு வயிற்றுநோவோ, வயிற்றுளைவோ அல்லது வேறேதாவது தோல்வருத்தமோ, தடிமனோ ஏற்பட்டால் அது எந்த உணவால் ஏற்படுகிறது என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.

இந்த ஒவ்வாமை என்பது ஒரு பரம்பரை வருத்தமே. ஒரு தாய்க்கோ தந்தைக்கோ அல்லது அந்தக் குழந்தையின் பரம்பரையில் உள்ள வேறொருவருக்கோ ஒத்து வராத உணவு அனேகமான சமயங்களில் அந்தக் குழந்தைக்கும் ஒத்து வராது போகலாம். இந்த நிலையில் எந்த உணவில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ அந்த உணவை ஒரு கிழமைக்கு உண்ணாமல் விட்டு பால் கொடுத்துப் பார்க்க வேண்டும். பிள்ளைக்கு வந்த உபாதை குறைந்தால் அல்லது அப்படியான பிரச்சனைகள் தோன்றாதிருந்தால் அந்த உணவு இந்தப் பிள்ளைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தெளிவாகும். அதற்காக எல்லாப் பாலூட்டும் தாய்மாரும் இந்த உணவுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டு மென்ற அர்த்தம் கொள்ள முடியாது.

ஓவ்வொரு தாயும் தமக்கு எந்த உணவில் விருப்பமும் ஆசையும் இருக்கிறதோ, அந்த உணவால் குழந்தையின் உடலில் எந்த விதமான வித்தியாசமும் காட்டாத பட்சத்தில் எந்த வித யோசனையுமின்றி அவைகளை உண்ணலாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு பட்ட ஒவ்வொரு உணவுகள் ஒவ்வாமையைக் கொண்டு வரலாம். உதாரணமாக பால் தயாரிப்புகள், முட்டை, நட்ஸ்வகை, மீன், புளிப்பழங்கள் போன்றவை அனேகமான சமயங்களில் ஒவ்வாமைக் காரணிகளாக இருக்கின்றன. ஆனால் இவை அத்தனையும் கண்டிப்பாக எல்லோருக்கும் ஒவ்வாமையைத் தரும் என்று சொல்வதற்கில்லை.

ஆகவே பாலூட்டும் தாய்மாரே உங்களுக்குப் பிடித்தமானதை ஆசையானதை சுவையானதை யோசனையின்றி உண்ணுங்கள். அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பட்சத்தில் மட்டும் அந்தக் குறிப்பிட்ட உணவை இனம் கண்டு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இனி எவ்வளவு நீர் வகைகள ஒரு பாலூட்டும் தாய் அருந்த வேண்டுமெனப் பார்த்தால் -

ஒரு பாலூட்டும் தாய் ஒரு நாளைக்கு 2-3 லீற்றர் நீர் குடிக்க வேண்டும்.
ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவுகளிலும் நீர் இருப்பதால் ஒரு நாளைக்கு 2இலிருந்து 3லீற்றருக்கு மேற்பட்ட தண்ணீர்குடிப்பதுவும் கூடாது. ஏனெனில் அதிகளவான தண்ணீர் குடிக்கும் போது பால் வெளிவருவதற்கான ஹோர்மோன் சுரப்பது தடைப் பட்டு பால் வெளிவர முடியாது போய்விடுகிறது. அதாவது பால் தாயிடம் இருக்கும். ஆனால் பிள்ளை வாய் வைத்து உமிழும் போது பால் வெளியிலே வர முடியாமல் இருந்து விடும்.

ஆகவே பாலூட்டும் தாய்மாரே...
மேற் சொன்ன படி உங்கள் தாகத்திற் கேற்ப நீராகாரத்தை உட் கொள்ளுங்கள். பாலூட்டத் தொடங்கும் போது உங்களருகே ஒரு கிளாஸ் தண்ணீரோ அல்லது தேநீரோ வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பாலூட்டும் போது உங்களுக்குத் தாகமேற்படலாம்.

உங்களுக்கான நல்ல குடிவகைகள்-
1) மின்னேரால் தண்ணீர்(நற்றியமும் காஸ்சும் குறைந்த)
2) பால் சுரக்கக் கூடிய தேநீர் (சின்னச்சீரகம், பெருஞ்சீரகம், அனிஸ் கலந்த) ஆனால் இத்தேநீர் ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் குடித்தால் பிள்ளைக்கு வயிற்றோட்டம் வரலாம்)
3) பழத் தேநீர்