Samstag, Juni 19, 2004

கருவிலே குறையிருந்தால் திருத்திக் கொள்ளலாம்

ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

‘‘மருத்துவத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. முன்பெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இப்போது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சைகளை செய்துவிட முடியும். அதற்கு அடிப்படையாக இருப்பது அல்ட்ரா ஸ்கேன் என்கிற கருவி. இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட மிக முக்கியமான சாதனம் எது என்று கேட்டால் அல்ட்ரா ஸ்கேன் என்றுதான் சொல்வேன். அதனால் ஏற்படும் நன்மைகளை நினைத்து நினைத்து தினமும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் மகப்பேறு மருத்துவர் மட்டுமல்ல. அல்ட்ரா ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் நிபுணர். அல்ட்ரா ஸ்கேன் சாதனத்தினால் ஏற்படும் பலன்கள் பற்றி அவர் விளக்கமாகச் சொல்கிறார்.

‘‘ஸ்கேன் செய்து கொள்வது பற்றி, அல்ட்ரா ஸ்கேன் சாதனம் பற்றி நம் மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்கப் போகிற குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியத்தான் ஸ்கேன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து. குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்வது ஸ்கேன் இயந்திரத்தின் ஒரேயரு செயல்பாடுதான். ஸ்கேனின் மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணா, பெண்ணா என்று அறிவது மிக மிகச் சாதாரண விஷயம்தான்.

கருத்தரித்த பெண்கள் கட்டாயமாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று நினைப்பதேயில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

முதலில், ஸ்கேன் செய்து பார்ப்பதையே தேவையில்லாத ஒரு விஷயமாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெண்களிடம் ஸ்கேன் சாதனம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.

வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். சில நாட்களுக்கு முன்பு பிரசவ காலத்தை நெருங்கிவிட்ட ஒரு பெண் என்னிடம் ஸ்கேன் செய்துகொள்ள வந்தார். அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி! கிட்டத்தட்ட ஒன்பது மாதத்தைத் தாண்டிவிட்ட அந்தக் குழந்தை கபாலம் இல்லாமலே வளர்ந்திருந்தது. ‘அனன்கேபாலி’ என்று அதற்குப் பெயர். மண்டையோடு இல்லாமலே வளர்ந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தலையில்லாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, தனக்கும் ஒரு அழகான குழந்தை பிறக்கப்போகிறது என்று அந்தத் தாய் எவ்வளவு கனவு கண்டிருப்பாள்? கருத்தரித்த ஒன்பது வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்திருந்தாலே குழந்தையின் நிலை என்ன என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த அளவுக்கு குறைபாடுகளோடு ஒரு குழந்தை வயிற்றில் வளர்வதை விட, கருக்கலைப்புச் செய்திருக்கலாம். ஆனால் ஸ்கேன் செய்து பார்க்காமல் விட்டதன் தவறு, மண்டையோடு இல்லாமல் குழந்தை ஒன்பது மாதங்களுக்கு வளர்ந்துவிட்டது. இந்தக் குழந்தை வெகு நாட்களுக்கு வாழ முடியாது என்பதால் வயிற்றிலேயே இறந்துவிட்டது. எனவே, கஷ்டப்பட்டு சிசேரியன் செய்துதான் அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்தோம். இத்தனை சிரமம் நமக்குத் தேவைதானா என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது காரணம், பெரியவர்களின் ஆதரவின்மை. ‘ஸ்கேனெல்லாம் எதற்கு? எங்கள் காலத்தில் நாங்கள் ஸ்கேனெல்லாம் செய்துகொண்டோமா என்ன? அஞ்சாறு குழந்தையை நாங்க பெத்துக்கலையா?’ என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்கிறார்கள்.

அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிற வாதம் இது. முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது நாம் வாழும் வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. முக்கியமாக, நம்முடைய உணவுமுறை மாறியிருக்கிறது. முன்பு இயற்கையாக விளைந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது பல்வேறு இரசாயனப் பொடிகளைத் தூவி வளர்க்கப்பட்ட காய்கறிகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். எனவே, அதன் பாதிப்பு வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் ஏற்படும். இதை நம்முடைய பெரியவர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் இறந்து போயிருக்கலாம். அதற்கான மருத்துவ ஆதாரங்கள் இப்போது நம்மிடம் இல்லை என்பதால் அந்தக் காலத்தில் இது போன்ற பிரச்சினை இல்லை என்று சொல்லமுடியாது.

ஸ்கேன் செய்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் பணத்தை வசூல் செய்கிறார்கள். இதில் உள்ள வேறுபாடுகளை கவனிக்கும் மக்கள் ஸ்கேன் சாதனத்தின் மீதே சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். 125 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை ஸ்கேனுக்காக வசூல் செய்கிறார்கள். சிலர் அளவுக்கதிகமாக லாபம் சம்பாதிக்க நினைப்பதால் ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் அதிகமாகியிருக்கிறது. இதற்காக ஸ்கேன் செய்வதையே வெறுத்தால் அது சரியாக இருக்குமா? எனவே, கருத்தரித்த ஒவ்வொரு பெண்ணும் அவசியம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் அதை அப்போதே சரிசெய்துவிடக்கூடிய அளவுக்கு மருத்துவமுறை முன்னேறிவிட்டது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்போதே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்போதே செய்துவிடலாம். அல்லது குழந்தை பிறந்த பிறகு செய்யலாம் என்கிற நிலையில் இருந்தால், பிறகு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவோம்.

உதாரணமாக, குழந்தைகளுக்கு அன்னப்பிளவு ஏற்பட்டிருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு ஆறாவது விரல் வளரும். சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. எனவே, குழந்தை பிறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் வயிற்றுக்குள் இருக்கிறபோதே சில குழந்தைகளுக்கு கடுமையான உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது முக்கியமான உறுப்புகள் வளராமலே போயிருக்கும். அந்தக் குறைகளை வயிற்றுக்குள்ளேயே சரிசெய்தால்தான் குழந்தை பிழைக்கும். இல்லாவிட்டால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிடும்.

உதாரணமாக, சில குழந்தைகளுக்கு இருதயத்தில் ஓட்டை விழுந்திருக்கும். இந்த ஓட்டைகளைச் சரி செய்யக் கூடிய அளவுக்கு இருந்தால் உடனே ஆபரேஷன் மூலம் சரி செய்துவிடலாம். அல்ட்ரா ஸ்கேன் கருவின் உதவியோடு தாயின் வயிற்றின் மேலிருந்து கருவிகளைச் செலுத்தி குழந்தையின் இருதயத்தில் நுழைத்து ஆபரேஷன் செய்து விடலாம்.

இன்னும் சில குழந்தைகளுக்கு சிறுநீரில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இந்தக் குறையை அந்த நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறுநீரைச் சுற்றியுள்ள திசுக்கள் அழுகி, மொத்த சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, குழந்தை இறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே, ஸ்கேன் மூலம் குழந்தையின் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பைப் போக்கிவிடுவோம்.

மேற்சொன்ன இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் நம் ஊரிலேயே அடிக்கடி நடக்கும் விஷயங்களாகி விட்டன. ஆனால் வெளிநாட்டில் நடக்கும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தாயின் ரத்தம் ஒரு பிரிவாகவும், குழந்தையின் ரத்தம் வேறு ஒரு பிரிவாகவும் இருக்கும். இந்தக் குளறுபடியினால் குழந்தையின் உயிர் பிரிவதற்கு வாய்ப்புண்டு. எனவே, குழந்தையின் ரத்தத்தை எடுத்து முதலில் பரிசோதனை செய்கிறார்கள். அதில் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால் குழந்தைகளுக்கே புதிய ரத்தத்தை ஏற்றியிருக்கிறார்கள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவது என்பது வியக்கத்தக்க நிகழ்ச்சிதானே!

மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல குழந்தைகளுக்குக்கூட குளுக்கோஸ் ஏற்றலாம். இதுபோன்று நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களெல்லாம் இப்போது நடந்து வருகிறது.

சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் இருதயத்தையும், வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் முக்கியமான ஜவ்வு இருக்காது. இதனால் குடல் பகுதி இருதயத்துக்கு அருகே சென்று அதை செயலிழக்கச் செய்யும். அல்லது இருதயம், மூளைப் பகுதியை நெருங்கி வந்து அதன் செயல்பாட்டைச் செய்ய மறந்துவிடும். இதனால் குழந்தை உயிருக்கு உடனே ஆபத்து ஏற்படும். இந்த ஆபத்தைத் தடுக்க குழந்தை பிறந்தவுடன் குடல் பகுதியையும், இருதயப் பகுதியையும் பிரிக்கிற மாதிரி செயற்கையாக ஒரு தடுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது. குழந்தை வயிற்றுக்குள் இருக்கிறபோது இப்படிப்பட்ட பிரச்சினையோடு இருக்கிறது என்பது தெரிந்தால்தானே பிறந்தவுடன் ஆபிரேஷன் செய்யமுடியும்?

முன்பை விட இப்போது உடல் ஊனத்தோடு நிறைய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, காலம் கடந்து திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. முன்பு அதிகபட்சமாக இருபத்துநான்கு வயதிற்குள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போது பெண்கள் படித்து, வேலைக்குப் போய் செட்டிலான பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட மேலை நாட்டவர்கள் இப்போதெல்லாம் காலக்கிரமத்தில் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள். தப்பித் தவறி காலம் கடந்து திருமணமாகி, பிள்ளைப்பேறு ஏற்பட்டிருந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கிறபோதே ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்திருக்கிறார்கள். தொப்புள் கொடி மூலமாக ரத்தத்தை எடுத்து, அந்த ரத்தத்தில் ஏதும் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பார்த்து அப்போதோ அல்லது குழந்தை பிறந்த உடனேயோ சரி செய்துவிடுகிறார்கள்.

நெருங்கிய உறவில் திருமணம் புரிந்து கொள்வதாலும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, குரலில் குறைபாடுடையவர்கள் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய் கண்ட பெண்கள் கருத்தரித்தாலும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, சர்க்கரை நோய் கண்ட பெண்கள், குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்கு அதற்கான மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு கருத்தரிக்க வேண்டும் என்பது கட்டாயத்திலும் கட்டாயம். அதேபோல கருத்தரித்த பிறகு அவர்கள் அவசியம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

இத்தனை வளர்ச்சிக்குக் காரணமான அல்ட்ரா ஸ்கேன் மெஷினை மிகச் சிறந்த சாதனம் என்று நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லையே?’’ சிரித்துக் கொண்டே முடித்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

சந்திப்பு : ஏ.ஆர். குமார்
nantri- Kumutham

Freitag, Mai 21, 2004

வெள்ளை படுதல்

வெள்ளை படுதல்
எப்படித்தான் தோன்றுகிறது?

எச்சரிக்கையும் தீர்வும்.
சித்த வைத்திய நிபுணர் பார்த்தசாரதி

அந்தப் பெண்மணியை என்னிடம் கொண்டு வந்து நிறுத்தி, அவரின் மகள் கேட்ட முதல் கேள்வி, ‘‘எங்கம்மா உயிர் பிழைப்பாங்களா டாக்டர்?’’ என்பதுதான். கேள்வியால் அதிர்ச்சியுற்ற நான், அந்தப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தேன். ஒட்டடைக்குச்சி போன்று உடல் மெலிந்து காணப்பட்டார். கண்கள் சொருகி மயக்கநிலையில் நின்றுகொண்டிருந்தார். பெட்டில் அவரை படுக்க வைத்துவிட்டு நாடித்துடிப்பை முதலில் பரிசோதித்தேன். ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டபோது, மகள் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டார். சற்று நேரம் கழித்து அவரே சமாதானமாகி, ‘‘எங்கம்மாவுக்கு ரொம்ப நாளாவே வெள்ளைப்படுற பிரச்னை இருக்கு. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில காட்டிட்டிருந்தோம். ‘அது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்ல... எல்லாம் சரியாயிடும்’னு அப்பப்போ மருந்து தருவாங்க. நேத்திக்கு என்னடான்னா அம்மா நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. கொண்டுட்டு ஓடினேன். சோதிச்சுப் பார்த்தவங்க, ‘உங்கம்மாவுக்கு வியாதி முத்திப்போச்சு. இனி அவங்க பொழைக்கிறது கஷ்டம்தான்’னு சொல்லி கொண்டு போகச் சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நீங்கதான் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்தணும். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க’’ என்று கூறினார்.

நான் நோயாளியைத் தீவிரமாக பரிசோதிக்கத் தொடங்கினேன். அலோபதி மருத்துவர்கள் கூறியதுபோல் அவருக்கு வெள்ளைபடுதல் முற்றிப்போயிருந்தது. அதாவது வெள்ளைபடுதல் முற்றி, வெட்டை நிலைக்கு அவர் வந்திருந்தார். ஆனால், உரிய சரியான சித்த மருத்துவ சிகிச்சையளித்தால் அவர் பிழைத்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது. தாமதமின்றி உடனே சிகிச்சையை ஆரம்பித்தேன்.

சிலாசித்து பற்பத்தை வெண்ணெயுடன் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தேன். தென்னம்பாலை இடித்துச் சாறு பிழிந்து அதனையும் உள்ளுக்குக் கொடுத்தேன். அன்னபேதி செந்து}ரத்தை ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து கொடுத்தேன். துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அவரது பிறப்புறுப்பை சுத்தப்படுத்தி, ஆமணக்கு எண்ணெயில் நனைத்த சிறுபஞ்சை பிறப்புறுப்பில் துணி வைத்துக் கட்டப் பணித்தேன். இதனைத் தொடர்ந்து அன்று முழுக்க எனது கண்காணிப்பிலேயே வைத்திருந்து சிகிச்சை செய்தேன். மறுநாள் அவரை வீட்டுக்கு அனுப்பி, சிலாசித்து பற்பத்தை காலை, மதியம், இரவு என மூன்று மாதங்களும், தென்னம்பாலைச் சாறு வாரம் ஒரு குவளை, தினமும் இரண்டு இளநீர் என மூன்று மாதங்களும், ஆமணக்கு எண்ணெயில் சிறுபஞ்சை நனைத்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பிறப்புறுப்பில் துணிவைத்துத் தொடர்ந்து கட்டி வருமாறும், அன்னபேதி செந்து}ரத்தை காலை, மாலை ஒரு சிட்டிகை தேனுடன் மூன்று மாதங்களும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன். கூடவே, உடலுக்கு சூடு தரக்கூடிய உணவை தவிர்த்து குளிர்ச்சி தரும் உணவு முறையைக் கையாளுமாறு கூறினேன்.

அடுத்த ஒருவாரத்தில் அந்தப் பெண், தனது தாயாருடன் மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். இறந்துவிடுவார் என்று கூறப்பட்ட அந்தப் பெண்மணியிடம் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள். முகத்தில் தெளிவு தெரிந்தது. மகளின் உதவியின்றி மெதுமெதுவாக தானே நடந்து வந்தார். உடல் மெலிவு சற்று சரியாகியிருந்தது. அன்னபேதி செந்து}ரத்தின் விளைவால் உடலில் இரத்த விருத்தி ஏற்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து சிகிச்சையை தொடரச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அடுத்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் நான் க்ளினிக்கில் இருந்தபோது திடீரென்று எனக்கு போன். பேசியது அந்தப் பெண்தான். ‘‘டாக்டர், உங்களைப் பார்க்க வரலாமா? அம்மா உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார்’’ என்று கேட்டார். வரச்சொல்லி காத்திருந்தேன். தனது தாயாருடன் அந்தப் பெண் வந்தார். எனக்கு ஆச்சர்யம். அன்றைக்கு பார்த்தவர்தானா இந்தப் பெண்மணி என்று. நல்ல மாற்றங்களுடன் நிறைவான பெண்மணியாகக் காட்சியளித்தார். ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றேன். ‘‘எனது உடல் சூடு முற்றிலும் தணிந்துவிட்டது. வெள்ளைப்போக்கும் முழுமையாக நின்றுவிட்டது. நான் உங்களிடம் வந்து சிகிச்சை பெற்றது உட்பட எதுவுமே எனக்கு அந்தளவுக்கு நினைவில் இல்லை. அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போது உங்களால் பூரணமாக குணமடைந்துவிட்டேன். என்றாலும், மீண்டும் வெள்ளைப்போக்கு என்னைத் தாக்காமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும் டாக்டர்? மேலும் வெள்ளைப்போக்கு பற்றி எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்’’ என்றார். அவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை பாராட்டியபடி வெள்ளைப்போக்கு குறித்து இருவருக்கும் கூற ஆரம்பித்தேன்...


‘‘பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வெள்ளைப்படுதல் என்பது பரம்பரை நோயல்ல... தாய்க்கு வந்தால் மகளுக்கும் வருவதற்கு. அது உஷ்ணம் என்னும் வெட்டைச் சூட்டால் ஏற்படுவது. உங்களுக்கு இருப்பது போலவே உங்கள் மகளுக்கும் சூட்டாு உடம்பாக இயற்கையிலேயே இருந்தால், அவருக்கும் வெள்ளைப்படுதல் வருவதற்கு வாய்ப்புண்டு. மற்றபடி அம்மாவுக்கு, பாட்டிக்கு இருப்பதாலேயே மகளுக்கு வரும் என்பதெல்லாம் இல்லை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியின் மகள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘‘அப்போ வெள்ளைப்படுறது எப்படித்தான் தோன்றுகிறது டாக்டர்?’’

‘‘பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பி அதிகரித்து விடுவதால் உஷ்ணம் ஏற்பட்டு, கருப்பையின் வாய்ப் பகுதியில் பெண்களுக்குக் கட்டிகள், புண்கள் மற்றும் சதைகள் தோன்றுகின்றன. வெள்ளைப்படுதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாகிறது. கருப்பையில் ஏற்படும் பால்வினை நோய்க் கிருமிகளின் தொற்று, கருப்பை இடம் விட்டு இடம் மாறல், இரத்தக் குறைவு, கருப்பை பலவீனம், வீக்கம், முறையற்ற புணர்ச்சி முறையால் கருப்பை தாபிதம், அடிக்கடி பிள்ளைப்பேறு, மனக்கவலை, கடின வேலை, மிகுதியான உடலுறவு போன்றவைகளினால் கூட பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்பட்டு பெரும் வேதனை தருகிறது.

சினைப்பையிலிருந்து சினை முட்டை கருப்பை நோக்கிப் போகும்போதும் உடலுறவின் உச்ச நேரத்திலும்கூட இந்த வெள்ளைப்படுதல் ஏற்படும். சிலருக்கு மாதவிலக்கிற்கு முன்பாக இது கூடுதலாக இருக்கும். மாதவிலக்கு வருவதற்கான அறிகுறியாக இது தென்படும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த வெள்ளைப்படுதல் நோய் உண்டாகும். மாதவிலக்கு தோன்றி 8 தினங்களுக்குப் பின்புகூட சிலருக்கு இந்நோய் ஏற்படுவதுண்டு.’’

‘‘டாக்டர், வெள்ளைப்படுதலில் வகைகள் உண்டா? எனக்கு ஏற்பட்டது எந்த மாதிரியான வெள்ளைப்போக்கு?’’ என்றார் அந்தப் பெண்மணி.

‘‘வெள்ளைப்படுதலில் பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சை நிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும். சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். உங்களுக்கு ஏற்பட்டது முற்றுவதற்கு முந்தைய நிலை வெள்ளைப்படுதல். இன்னும் கொஞ்ச காலம் கவனிக்காது விட்டிருந்தாலும், அது உங்களை பிறப்புறுப்பு புற்றுநோயில் கொண்டு போய் தள்ளியிருக்கும். வெள்ளைப்படுதலின்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை பெண்களிடம் ஏற்படுத்திவிடும். பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். கருப்பை உட்பகுதியில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். கருச்சிதைவை உண்டாக்கும். நுண்ணுயிர்த் தாக்குதலை ஏற்படுத்தும். இறுதிக் கட்டத்தில் புற்றுநோயை உண்டாக்கி ஆளையே காலி செய்துவிடும்.’’

இருவரின் முகத்திலும் அதிர்ச்சி தென்பட்டது. பயந்துகொண்டே மகள் கேட்டார். ‘‘வெள்ளைப்படுறது ஒருத்தர்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவுமா டாக்டர்?’’

‘‘சாதாரணமாகப் பரவாது. ஆனால், வெள்ளைப்படுதல் உள்ள பெண்களின் பேண்ட்டீஸ், பாவாடை போன்றவற்றை அடுத்த பெண்கள் அணிய நேரும்போது அவர்களுக்கு இது தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதேபோல், வெள்ளைப்படுதல் உள்ள பெண்ணைப் புணரும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பிடரி ஜன்னி என்னும் நோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.’’

பிரமிப்பு விலகாத முகத்தோடு அந்தப் பெண்மணி கேட்டார்... ‘‘வெள்ளைப்படுதலை சித்த வைத்தியத்தின் மூலம் ஆரம்பத்திலேயே எப்படி எளிதாக குணப்படுத்தலாம் டாக்டர்?’’

‘‘இந்நோயை விரட்டுவது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பார்த்தால் குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால், நம் பெண்கள் வெட்கப்பட்டுக்கொண்டு இப்பிரச்னை குறித்து வெளியே சொல்வதில்லை. முற்றிய பிறகுதான் முனகுகிறார்கள். சித்த மருத்துவத்தில் இதற்கென ஏராள மருந்துகள் உள்ளன. உலர்ந்த மணத்தக்காளி சாறெடுத்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம். வெள்ளை கல்யாணப் பூசணியை சமைத்துச் சாப்பிடலாம். செம்பருத்தி இலைக் கொழுந்தை பாலில் அரைத்துச் சாப்பிட இந்நோய் விலகும். கருவேலம் கொழுந்தையும் அரைத்துச் சாப்பிடலாம். கொன்றைப் பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டை தோலைப் பொடிசெய்து தேன் சேர்த்துப் பருகலாம். இதெல்லாம் வெள்ளைப்படுதலுக்கான எளிய சித்தவைத்திய முறைகள். வெள்ளைப்படுதலின் அளவு, நோயாளியின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வைத்திய முறைகள் மாறும்’’ என்றேன்.

_திவ்யா
nantry Kumutham

Sonntag, Mai 09, 2004

மாதவிலக்கு... தயங்காம பேசுவோம்..

தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய்...
பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள், பயங்கள்..

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... இப்படி பல கூடாதுகள்.

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்!
இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, 'ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ' என்ற சலிப்பு தட்டுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரிய வைக்கும் முயற்சியில்தான் இந்த இணைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அந்த மூன்று நாட்களில் (சிலருக்கு கூடலாம், குறையலாம்) உண்டாகும் அத்தனை பிரச்னைகளை பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி, டாக்டர் தமிழிசை, டாக்டர் சுமதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு A to Z தெளிவு படுத்தி சுலபமான கேள்வி-பதில் வடிவில் வழங்கியிருக்கிறோம்.

கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறோம்? நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இதை வைத்துக் கொள்ளலாமே..

படித்துப் பயனடையும் தாய்மார்கள் மறக்காமல் மகளுக்காக இந்த இணைப்பை பத்திரப்படுத்துங்கள்.

பூப்பூக்கும் நேரம்
பூப்பெய்துதல் என்கிற பருவமடையும் கட்டம் எப்படிப்பட்டது? அது எவ்வாறு நிகழ்கிறது?
பூப்பெய்துதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.
முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. 10-11 வயதில் (இப்போது 9 முதல் 13) இது துவங்கும். ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். பின்பு உடல் வளர்ச்சியில் வேகம் தென்படும். அந்த வயது பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்தவளாக தெரிவாள். இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிக மாகும். பூசினாற்போல் சதைப் பற்று ஏற்படும். அக்குளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது. அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக மாத விலக்கு நேர்கிறது.

உள்ளே என்ன நடக்கிறது
இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள். உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?
பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்து வரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பை மீதும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் ஹார்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் முதல் மாத விலக்கு நிகழ்கிறது.

ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். அதனால் தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாக வராது. இந்த கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம். போகப் போக சரியாகிவிடும்.

ஐந்துக்குள் அம்மா..டி!
இன்ன வயதுக்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?
18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரை பார்க்க வேண்டும். நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள் கூட உண்டு. அதெல்லாம் அபூர்வம். 7 முதல் 9 வயதுக்குள் பூப்படைதலை 'விரைவுபடுத்தப்பட்ட பூப்பெய்தல்' என்கிறோம். அதிக உடல் வளர்ச்சியால் அல்லது பரம்பரை காரணமாக இது நிகழலாம். மிகச்சிறிய வயதில் பூப்படைந்தாலும் அதிகப்படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே மாதா மாதம் விலக்காக முடியும். சிறு வயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சரியான சைக்கிள் எது? பாதுகாப்பானது எது?
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம்?
அதை சுழற்சி என்போம். சைக்கிள். சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக வரலாம். அது தப்பில்லை.

இந்த சுழற்சிக்குள் என்னென்ன நடக்கிறது?
அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக் கூடிய, உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எவை என்று எப்படி வகைப்படுத்துவது?
அந்த 28 நாட்களை பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1 முதல் 5 மாதவிலக்கு நாட்கள்.
5 முதல் 10 ஆரம்ப நாட்கள்.
அப்போது ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். கருமுட்டை வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள்
அதே வளர்ச்சி வேகமாகி 14-ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும். எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28-வது நாள் வரைபின்பகுதி நாட்கள்.
ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கர்ப்பப்பையின் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாக தென்படும். (ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தை போல!)
கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் அளவும் குறைந்துவிடும்.
தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லை யென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பை யில் வளர்ந்திருக்கும் நடுசதை (Endometrium) சுருங்கி, அந்த சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக் காக வெளிவரும். மறுபடியும் ஐந்து நாள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்,.

லிமிட் என்று உண்டா?
மாதவிலக்கு எத்தனை நாட்கள் நீடிக்கலாம்?
3 முதல் 6 நாட்கள் இருக்கலாம். 3க்கு குறைவாக அல்லது 6க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.

எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை நார்மல் எனலாம்?
சுமார் 50 மில்லி லிட்டர். குறைந்தது 20 அதிகபட்சம் 80 என இந்த அளவும் வேறுபடலாம். அப்போது தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மி.கி. வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது. உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.

ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் என்றும் கூறலாம்.
கம்ப்ளீட் பிச்சர் இதுதான்

இந்த காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது?.
ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 30 குமிழ்கள் உருவாக ஆரம்பித்து, பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒரு குமிழ் பெரிதாகி, அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14-ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்த குமிழ் வெடித்து கரு வெளிவந்து விந்துவை எதிர் கொள்ள தயாராகிறது.

மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
மார்பகம் பாரமாக தோன்றும், பெரிதாவது போல் தெரியும், வலி ஏற்படும். இவை மாதவிலக்கு ஏற்பட 2 அல்லது 4 நாள் முன் ஏற்படும். இது சகஜம். சிலருக்கு இந்த அறிகுறிகள் சற்று அதிக மாக இருக்கலாம்.
வயிறு 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வலி இருக்கலாம். வருமுன் வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.
எடை உடல், நீர் கோர்த்தது போல, எடை அதிகமானது போல தோன்றும்.
கர்ப்பப்பை வாயில் 14-ம் நாளிலிருந்து வளவள என்ற திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.

மனதிலும் மாற்றங்கள்
உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே?
நிச்சயமாக! கவலை, பதற்றம், ஆர்வமின்மை, ஈடுபாடின்மை, அசதி, கோபம், டென்ஷன், எரிச்சல், தூக்க மின்மை, குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல், தற்கொலை எண்ணம், தனிமை விரும்புதல், தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள். இந்த பிரச்னைகளுக்கு காரணம் இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம், பி-6 என்ற வைட்டமின் பற்றாக் குறையாக இருக்கலாம், தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளின் தாக்கம், டசுச்நூஹஷபீகூபி, டசுச்சூபீச்யுநூஹபிக்ஷகூபிசூ போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகலாம். அதிகப்படி நீர் சுரப்பதும், சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணங்களாக இருக்கலாம்.

இதற்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?
தனிப்பட்ட சிகிச்சை கிடையாது.. வைட்டமின்கள், மனநல ஆலோசனை, உடற்பயிற்சிகள் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்தலாம்.

பிரச்னைகளில் இத்தனை வகை
பொதுவாக என்ன மாதிரியான மாத விலக்கு பிரச்னைகள் உள்ளன?
1. குறைந்த அளவு உதிரப்போக்கு 2. உதிரப்போக்கே இல்லாமை. 3. அதிகப்படியான உதிரப் போக்கு 4. சுழற்சி முறையில் மாறுதல் 5.வலியுடன் கூடிய உதிரப்போக்கு.. இப்படி பல.
குறைந்த அளவு உதிரப்போக்கு
இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம். மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப் படுவது. உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது (உ-ம்: அதிக உடற்பயிற்சி, பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது) எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம்.

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, வேறு நோய் இருந்தாலும் (உ-ம்: சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம்.
சினைப்பையில் PCOD (Poly Cystic Ovarian Disease) என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம். சில நேரங்களில் மிகச் சிறிய வயதி லேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.

பரிசோதனைகள் என்ன?
இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஈஸ்ட் ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவை கணக்கிட வேண்டும். ஸ்கேன் செய்து கர்ப்பப்பை, சினைப்பை சரியான அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் D & C செய்து கர்ப்பப்பையின் உள்சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.

எல்லாமே லேட்டானால்..?
சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில்தான் பருவம் அடைகிறார்கள். இதனால் பிள்ளைப்பேறு பாதிக்குமா? சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50வயதை தாண்டிதான் விலக்கு நிற்குமா?
உடல்வாகு, உணவு, வளர்கிற சூழ்நிலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை பொறுத்து பூப்பெய்தும் வயது மாறுபடலாம். சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும், சில சமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம். தாமதமாக பூப்பெய்துவதால் பிள்ளைப் பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. பூப் பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை.

டிஸ்சார்ஜ் 10 நாள் இருப்பது
சிலருக்கு உதிரப்போக்கு 10நாள் வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே... ஏன்?
பெரிய மனுசியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை. பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும், உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான். உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்ச்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம். சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோகூட ஏற்படலாம். இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும். ரத்தப் போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூப்புக்குப் பின் ஒரு மாதத்துக்குள் பலமுறை வந்தாலும், பல மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.

கல்யாணம் செய்வதால் பலன்
சில பெண்கள் ஆரோக்யமாக, உடல் வளர்ச்சி சரியாக இருந்தாலும் பூப்பெய்தாமலே இருந்துவிடுகிறார்களே, அதற்கு காரணம் என்ன? திருமணமானால் சரியாகி விடும் என்று சொல்லி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது சரியா? அவர்களுக்கு குழந்தை பிறக்குமா? இதை அறிய என்ன சோதனை செய்யவேண்டும்?
18 வயதை தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால், கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும். பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால், மாதவிலக்கு தோன்றுகிறது. அது தொடங்கவே இல்லை என்றால், பரிசோதனை அவசியம்.
நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். தாயின் வயிற்றுக்குள் பெண் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கரு முட்டைகளை உள்ளடக்கிக் கொண்டு வளர்கிறது. இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக (Streak Ovary) அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும், இதனால் பூப்பெய்துவது இல்லை.
இப்பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டால் மாதவிலக்கு தோன்றும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு மாத்திரை உட்கொண்டால்தான் மாதவிலக்கு மாதந்தோறும் வரும். இவர்க ளுக்கு குழந்தை பிறப்பது அரிது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம்.
ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும். கர்ப்பப்பை இல்லாமல், யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் வடிவமைப்பு ஆபரேஷன் செய்துகொண்டால் தாம்பத்ய உறவில் சிக்கல் இருக்காது.
காசநோய், இளம்பிராய நீரிழிவு நோய் (Juvenile Diabetes) ஆகியவற்றால் கர்ப்பப் பை பாதிக்கப்பட்டிருந்தாலும் மாதவிலக்கு வராது. துளையற்ற கன்னிப்படலம் (Imperforate Hymen), யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும்.
இவ்வாறு பூப்பெய்தியும் சூதகம் (Pelvis) மறைந்திருந்து மாத விலக்கிற்கு தடையேற்படுத்துவதை மறை சூதகம் (Cryptorchidism) என்று கூறுவர். ஆபரேஷன் செய்து தடையை அகற்றி வழி செய்தால் இவர்கள் பூப்பெய்தலாம். குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு.

மாதாமாதம் விலக்கு முறையாக வந்தாலும், உதிரப்போக்கு ஒரு நாள் கூட முழுமையாக இல்லாமல் சில நாள் சிறுதுளிகளாக மட்டுமே வந்தால் அதனால் குழந்தை பிறக்காமல் போகுமா?
மாதவிலக்கு ஒழுங்காக வந்து, பாலின உறுப்புகளின் வளர்ச்சி சரியாக இருந்து, ஹார்மோன் கோளாறுகளும் இல்லையென்றால் அரை வாரம், அரை நாள், அரை மணி நேரம் என்று எப்படி வந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

குறைந்த அளவு உதிரப்போக்கு உள்ளவர்கள் அதனால்தான் உடல் பருமனாகிறது என்றும், குழந்தை பிறக்காது என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு. பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள கொழுப்புச் சத்தால்தான் (Obesity) மாதவிலக்கு சொற்பமாக இருக்கிறது. எடையைக் குறைத்தாலே பிரச்னை தீர்ந்துவிடும்.
கர்ப்பப்பை குழாய் அடைப்பில்லை. கருமுட்டை வெடித்து வெளி வருவதில் பிரச்னை இல்லை என்றால் குறைந்த உதிரப்போக்கு, குழந்தை பிறக்க தடையாக இருக்காது.

ஆரோக்யமாக இருந்தாலும் சிலருக்கு பூப்பெய்திய நாளிலிருந்தே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் மாதவிலக்கு வருகிறது. இவர்கள் கர்ப்பம் தரிக்க இயலுமா? வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா?
மாதா மாதம் விலக்கு வருபவர்களுக்கு ஆண்டுக்கு 12 முறை கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருபவர்களுக்கு அந்த வாய்ப்பு 4 அல்லது 6 முறைதான் கிடைக்கும். அதுதான் வித்தியாசம். வேறு தொல்லைகள் கிடையாது.

முதலில் மாதவிலக்கு சரியாக வந்து,. திருமணத்துக்குப் பின் தள்ளித் தள்ளி வர ஆரம்பித்து, பின்னர் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அதுவும் மாத்திரை சாப்பிட்டால்தான் வருகிறது என்றால் அதற்கு காரணம் என்ன?
ஹார்மோன் குறைபாடுகளால் இவ்வாறு ஏற்படலாம். சோதனை மூலம் அறிந்து சிகிச்சையால் சரிசெய்யலாம். சினைப்பை மாதம் ஒரு சினை முட்டையை விடுவிப்பது தடை பட்டாலும் சினைப்பையில் சிறுசிறு நீர்மக் கட்டிகள் தோன்றிவிடுகின்றன. இதை 'பலநீர்மக் கோளகக் கருவணு வகம்‘ (PCO - Poly Cystic Ovary) என்று கூறுவர். ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
சினைமுட்டை விடுவிப்பை தூண்டும் (Ovulation Induction) சிகிச்சையே போதுமானது. அதற்கென உள்ள மருந்துகளை வருடக்கணக்கில் சாப்பிடுவது தவறு. நீரிழிவு நோய்க்கான மெட்ஃபார்மியா (Metformia) மாத்திரைகளாலேயே சரிசெய்ய இயலும்.
நீரிழிவு, காசநோய், ரத்த சோகை போன்றவை அல்லது கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் சாப்பிட்டு நிறுத்தினாலும் இவ்வாறு நேரிடலாம்.

தள்ளிப்போக மாத்திரை போடுவது
தொடர்ந்து சரியாக மாதவிலக்கு வரும் போது எங்காவது ஊருக்கு போகவோ, பண்டிகை வருகிறது என்றோ மாத்திரை போட்டு மாதவிலக்கை தள்ளிப் போடுவது இன்று பலருக்கு பழக்கமாகிவிட்டது.. இது சரியா? இதனால் உடம்புக்கு கெடுதலா?
Primol-I போன்ற மாத்திரைகளால் மாதவிலக்கை விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். அத்யாவசிய காரணத்துக்காக எப்போதாவது ஒரு முறை அப்படி செய்யலாம். அடிக்கடி இந்த மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல. ஹார்மோன் சீர்கேடுகளை தோற்றுவிக்கும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை என்பது உண்மையா?
உண்மைதான். ரத்த சோகையிலிருந்தும் அது மீட்கிறது. இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கை குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.

மாதவிலக்கு சரியாக வந்தபோதிலும், இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறு துளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்துவிடுகிறது. பின்னர் எப்போதும் போல் வரவேண்டிய நாளில் வந்துவிடுகிறது. இது ஏன்? உடம்புக்கு கெடுதலா?
சில பெண்களுக்கு மாதவிலக்கு தோன்றிய 14 அல்லது 16-வது நாளில் இவ்வாறு ஏற்படும். இது சினைப்பையில் இருந்து சினைமுட்டை விடும் நாளில் ஏற்படுகிறது. இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. உடம்புக்கு கெடுதல் கிடையாது.

கர்ப்பப்பை ஆபரேஷனின் அவசியம்
30 வயதுக்கு மேல் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவது தான் சரியான வழியா?
சாதாரண கர்ப்பப்பை கட்டிகளாக இருந்து தொந்தரவு இருந்தால், ஆபரேஷன் செய்வது நல்லது. கட்டிகள் இல்லை யென்றால் D&C செய்து பார்க்க வேண்டும். இந்த வயதில்தான் புற்றுநோய் தோன்றும். பரிசோதனை அவசியம். எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் (Cervical Cancer), கர்பப்பை கழுத்து உள்வரி ஜவ்வு புற்றுநோய் (Endometrial Carcinoma) ஆகியவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே இந்த வயதில் அதிக உதிரப்போக்கு இருந்தால், அனைத்துப் பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். வருமுன் காப்பது நல்லது.

வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதலும் அதனுடன் ரத்தப்போக்கும் ஏற்பட காரணம் என்ன? இது நோயின் வெளிப்பாடா? என்ன சிகிச்சை பெற வேண்டும்?
பருவ மாற்ற காலத்தில் மாத விலக்குக்கு முன்னும் பின்னும் சினைமுட்டை விடுபடும்போதும், கர்ப்ப காலத்திலும் ஹார்மோன்களின் சுரப்பான வெள்ளைப் படுதல் இருக்கலாம். இது தவறில்லை. ஆனால், வெள்ளைப்படுதல் அதிகரித்தோ, நாற்றமுடனோ, உதிரம் கலந்தோ இருந்தால் ஆபத்தான விஷயம். உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும்.

மாற்று சிகிச்சை வழிமுறைகள்
கர்ப்பப்பை கட்டியினால் உதிரப்போக்கு அதிகமாகுமா? கர்ப்பப்பையை எடுக்க நேரிடுமா? அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை உள்ளதா?
பொதுவாக 50 முதல் 60 சதவிகிதத்தினருக்கு மிகச் சிறிய அளவிலிருந்து (0.5-1 cm) பெரிய அளவு வரை பல்வேறு கட்டிகளாக தோன்றுவது நார்க்கழலை கட்டி (Fibroid) எனப்படும். இதனால் அதீத உதிரப்போக்கு (Menorrhagia), சூதக வலி (Dysmenorrhoea) ஆகிய தொல்லைகள் இருந்தால், முதலில் D&C செய்து உள்வரி ஜவ்வின் தன்மையை கண்டறிய வேண்டும். பின்பு மாத்திரைகளால் உதிரப்போக்கையும் வலியையும் குறைக்கலாம். அதையும் மீறி போகும் உதிரப்போக்குக்கு, அவரவர் வயதுக்கேற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டிவரும்.
1. Myomectomy - கட்டி அகற்றும் அறுவை (இது குழந்தை வேண்டுபவருக்கு பொருந்தும்).
2. Hysterctomy - கர்ப்பப்பை அகற்றுபவை (40 வயது தாண்டியவருக்கு).
சமீபகால சிகிச்சை முறைகளான
1. Hysteroscopic Myomectomy
2. Uterine Artery Embolisation ஆகியவை சிலருக்கு பொருந்தும்.

மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் (மெனோ பாஸ்) உதிரப்போக்கு அதிகமாக இருப்பது சகஜமா?
இல்லை. அது தவறான கருத்து. மாதவிலக்கு முற்றுப்பருவத்தில் உதிரப்போக்கு அதிகம் இருந்தாலோ, அதிக நாட்கள் நீடித்தாலோ, குறுகிய காலத்துக்கு ஒரு முறை வந்தாலோ, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பையில் புற்றுநோய் ஆகியவையாக இருக்கக்கூடும். 45 வயதுக்கு மேல் 52 வயதுக்குள்ளாக பெரும்பாலும் மாதவிலக்கு நின்று விடுகிறது. சிலருக்கு திடீரென நின்றுவிடும். பலருக்கு அளவில் குறைந்தோ சில மாதங்கள் தள்ளி வந்தோ நிற்கிறது. இதற்கெல்லாம் மாறாக எந்தவித உதிரப்போக்கு பிரச்னையாக இருந்தாலும் சோதனை செய்வது அவசியம்.

இனி, வாசகிகளின் சில முக்கிய கேள்விகளும் டாக்டர் பதில்களும்


பேப் ஸ்மியர் டெஸ்ட்
எனக்கு வயது 34. இரண்டு குழந்தைகள். சமீபகாலமாக உடலுறவு முடிந்தபின் மாதவிலக்கு போன்று ரத்தப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றபோது 'கர்ப்பப் பையில் கோளாறு இருக்கலாம். பேப் ஸ்மியர் டெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றார். அப்புறம் பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் என்றால் என்ன? உதிரப்போக்கு பிரச்னைக்கு கட்டாயம் இந்த பரிசோதனையை செய்யத்தான் வேண்டுமா?
பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை கழுத்து, கர்ப்பப்பைவாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை. மிகச் சுலபமாக, 10 நிமிடத்தில் செய்துவிடலாம். சோதனை செய்யவிருக்கும் இடங்களில் மருந்தோ, தண்ணீரோ பட்டிருக்கக் கூடாது. மாத விலக்கின்போது இந்த சோதனையை செய்யக்கூடாது. ஐஸ்க்ரீம் குச்சி போன்ற ஒன்றை கர்ப்பப்பை கழுத்தில் லேசாக தடவினால் அங்குள்ள திசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். அதனை ஒரு கண்ணாடித் தட்டில் தடவி மருந்திட்டு மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ள திசுக்கள் உள்ளதா, புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக சொல்லலாம். இவ்வளவு எளிதான ஒரு பரிசோதனை முறை இருந்தும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முற்றிய நிலையில் வரும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்! 30 வயது தாண்டியவர்கள் இந்த டெஸ்ட்டை வருடம் ஒரு முறை செய்து கொள்வது நல்லது. உடலுறவுக்குப் பின் உதிரம் பட்டால் அது கர்ப்பபை புற்று நோயின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய ரத்தப் போக்கு ஏற்படுவது தொடர்ந்தால் கட்டாயம் இந்த சோதனை செய்தாக வேண்டும்.

பிறப்புறுப்பு சுத்தம்
எனக்கு திருமணமாகி 15 நாள் ஆகிறது. மாதவிலக்காகி 20 நாளுக்குள் மீண்டும் ரத்தப்போக்கு விட்டுவிட்டு வந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இப்படி ஆனதில்லை. பயமாயிருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? இது மாதவிலக்கு ரத்தப்போக்காக இருக்காது. உடலுறவால் ஏற்பட்ட காயம், அந்தக் காயத்தின் மீது கிருமிகளின் தாக்குதலால் (Infection) இருக்கலாம். பரிசோதித்து மருந்து களிம்பு மூலம் குணப்படுத்தலாம். நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். உடை சுத்தமாக இருக்கவேண்டும். பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்வதும் அவசியம். உடலுறவுக்குப் பின் அவசியம் சுத்தம் செய்யுங்கள்.

2 ஆண்டுக்கு ஒரு முறை டெஸ்ட்
மாதவிலக்கு தொந்தரவுக்காக டாக்டரை பார்த்தேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் செய்து அதில் வித்தியாசம் இருந்ததால் Colposcopy and Biopsy செய்து கொள்ள சொல்கிறார். அவசியமா?
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) வருமுன், அதில் ஏற்படும் வித்தியாசங்களை அறிய பேப் ஸ்மியர் பரிசோதனை உதவுகிறது. அதன் பிறகு Colposcopy & Biopsy அவசியமாகிறது. பல மடங்கு பெரிது படுத்தி காண்பிக்கும் லென்ஸ் பொருத்திய Colposcope இல் பார்ப்பதால் மிகச் சிறிய மாற்றத்தையும் ஆராய முடியும். அதிலிருந்து சதையை எடுத்து பரிசோதிப்பது (Biopsy) எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்பதை தீர்மானிக்க உதவும். ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை செய்துகொள்வது நோயை தடுக்க உதவும்.

மார்பில் பால் போல் திரவம்
எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக மாதவிலக்கே வருவதில்லை. அடிக்கடி மார்பிலிருந்து பால் போன்ற திரவம் கசிகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கும் கருத்தரிக்காமல் இருப்பதற்கும் சம்பந்தம் உண்டா?
ப்ரோலேக்டீன் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். இந்த ஹார்மோன், மார்பக ரத்த நாளங்களில் வேலை செய்து பால் சுரக்க வைக்கிறது. ப்ரோலேக்டீன் அதிகம் இருந்தால் அது மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். சினைப்பையில் சினை முட்டைக் குமிழ்கள் ஏற்படாதபடி இவை தடுக்கின்றன. அதனால் மாதவிலக்கும் வராது. கரு உருவாகாததற்கு இதுவும் முக்கிய காரணம். ப்ரோலேக்டின் அளவை குறைக்க மருந்துகள் உள்ளன. டாக்டர் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள்.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்
என் வயது 48. மூன்று குழந்தைகள் உள்ளன. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். இரண்டு மாதங்களாக விட்டுவிட்டு மாதவிலக்கு வந்து கொண்டிருக்கிறது. இது புற்றுநோய்க்கு அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது.
இந்த வயதில் சினைப்பையில் கரு முட்டை உற்பத்தி குறைந்துவிடும். தேவையான ஹார்மோன் இல்லாததால் விட்டுவிட்டு விலக்காகலாம். ஆனால் கர்ப்பப்பையில் கட்டி, புற்று போன்றவை இருக்கிறதா என்பதை Pap smear /scan, Endometrial Biopsy ஆகிய சோதனைகள் மூலம் அறிந்து உடனடி சிகிச்சை மூலம் குணப்படுத் தலாம்.

மார்பகத்தில் மாற்றங்கள்
எனக்கு மாதவிலக்கு வருமுன் மார்பகம் பருத்து குத்துவலி எடுக்கிறது. விலக்கானதும் சரியாகி விடுகிறது. எதனால் இப்படி ஆகிறது? சிகிச்சையில் குணமாகுமா?
மாதவிலக்கின்போது மார்பகத்தில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பெரிதாவதும் கல்போல கடினமாவதும், கை வைத்துப் பார்த்தால் உள்ளே சிறுசிறு கோளங்கள் இருப்பது போல ஒரு உணர்வும் வலியும் கூட ஏற்படும். ஈஸ்ட்ரோஜன், ப்ரொ ஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்கள் மாத விலக்குக்கு 3-4 நாளுக்குமுன் ரத்தத்தில் அதிக அளவு காணப்படும். அவை மார்பகத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலம் உடலில் நீர் கோர்ப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிலக்கு ஏற்பட்டவுடன் இந்த ஹார்மோன்களின் அளவு குறைவதால் மார்பகம் பழைய நிலைக்கு வந்துவிடும். சில சமயம் பழைய நிலையை அடைய 7 நாள் கூட ஆகலாம். இதற்கு சிகிச்சை என்று தனியாக எதுவும் தேவையில்லை. வலி அதிகமானால் வலி நிவாரணிகளை நாடலாம்.

ஊசி மூலம் தடுப்பது
டெபோ ப்ரோவேரா (DEPO-PROVERA) பற்றி கேள்விப்பட்டேன். இந்த ஊசியை போட்டுக் கொண்டால் மாதவிலக்கே வராது என்கிறார்களே, இப்படி ஊசி மூலம் மாதவிலக்கை நிறுத்தி வைப்பதால் உடல் நலத்துக்கு பாதகமில்லையா? எல்லோரும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? டெபோ-ப்ரோவேரா எனும் மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்தினால் அது மூன்று மாத காலத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து மாத விலக்கு சுழற்சி மற்றும் கருமுட்டை உருவாவதை தடுத்து கருத்தடையை ஏற்படுத்துகிறது. இதனால் மாத விலக்கு வராமல் அல்லது குறைவாக இருக்கும். சில சமயம் அந்த நாட்களில் வரும் வயிற்றுவலியும் குறையும். இந்த ஊசியினால் சிலருக்கு மாதவிலக்கு முற்றிலுமாக நிற்காமல், முறைப்படி இல்லாமல் அவ்வப்போது வருவது, மன அழுத்தம், வாந்தி, மார்புவலி போன்ற பக்க விளைவுகள் வரலாம். மறுபடி குழந்தை வேண்டுமென்று இந்த மருந்தை நிறுத்தினாலும் கரு உருவாவது தாமதப்படலாம். சிலருக்கு இந்த மருந்து அலர்ஜியாகலாம். அதிக உதிரப் போக்குக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

ஆபரேஷன் மீது பயம்
எனக்கு வயது 37. மணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எனக்கு அந்த மூன்று நாட்களில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தால் ஆபரேஷன் பண்ண சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆபரேஷன் இல்லாமல் இதனை சரிப்படுத்த வழி உள்ளதா? எதனால் உதிரப்போக்கில் திடீர் மாறுபாடு ஏற்படுகிறது?
கர்ப்பப்பையின் உள் சுவரை ஒட்டியிருக்கும் ஜவ்வு, ஹார்மோன் சுரப்பின் போது கரைந்து வெளியே வரவேண்டும். சில சமயம் முழுவதுமாக கரையாமல் வழக்கமான அளவுக்கு மேல் வளர்ந்து தடித்துவிடுகிற நிலையில் அதிக உதிரப் போக்கு ஏற்படும். தவிர, உள்வரி ஜவ்வு இடம் மாறி அமைவதால் உண்டாகும் எண்டோமெட்ரியோஸிஸ் என்ற நோய் ஏற்பட்டாலோ, வேறு காரணங்களே இல்லாமல் ஹார்மோன்கள் சரிவர இயங்காமல் இருந்தாலோ, உள் சுவரில் பாலிப், ஃபைப்ராய்ட் போன்ற கட்டிகள் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பை புற்று நோய் இருந்தாலோ அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம். இவ்வாறான உடல் மாற்றங்கள்தான் என்றில்லை, டென்ஷன், பயம், குழப்பம் போன்ற மன உளைச்சல்களும்கூட அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உதிரப்போக்குக்கு முன்பு ஆபரேஷன் மட்டுமே தீர்வாக இருந்தது. இப்போது கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள் இருந்தால் மட்டுமே ஆபரேஷன் தேவை என்ற வகையில் பல வழி முறைகள் உள்ளன. சிறிய கட்டிகள் இருந்தால் லேசர் ட்ரீட்மென்ட் அல்லது எலக்ட்ரோ சர்ஜரி மூலமே சரிப்படுத்தி விடலாம். கர்ப்பப்பையை சுற்றியுள்ள சிறு கட்டிகள் குறிப்பாக உள்சுவர் கட்டிகள்தான் அதிகளவு உதிரப்போக்கை ஏற்படுத்துகின்றன. கர்ப்பப்பைவாய் வழியாக எலக்ட்ரோடை செலுத்தி கட்டிகளை கரைப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது. கட்டிகள் இல்லை. ஆனால் அதிக ரத்தப் போக்கு என்றால் எளிய மற்றும் நவீன சிகிச்சையான யூட்ரஸ் பலூன் தெரபி மூலம் குணமடையலாம். கர்ப்பப்பைவாய் வழியாக பலூனை உள்ளே நுழைத்து செய்யப்படும் சிகிச்சை இது. பலூனிற்குள் வெப்பக் காற்றை செலுத்தி, விரிவடைந்த பலூன் மூலம் அதிகப்படியான ரத்தத்தை வரவைக்கும் திசுக்கள் அழிக்கப்படும். குழந்தை பிறந்து, இனி குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களும், மெனோபாஸிற்கு முந்தைய நிலையில் இருப்பவர்களும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம்.

மருந்துகளால் முடியும்
எனக்கு 33 வயது. அதிக ரத்தப்போக்கு இருந்ததால் டாக்டர் D & C செய்தார். கட்டி எதுவும் இல்லை என்று ஸ்கேனில் தெரிந்தது. Simple Endomeòtrial Hyperplasia என்ற நோய் இருப்பதால் கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன் செய்துகொள்ள சொன்னார். மருந்து மாத்திரைகளால் இதை சரிசெய்ய முடியாதா?
முடியும். Dysfunctional Uterine Bleeding (DUB) என்ற மாதவிலக்கு நோய்க்கு ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின்படி 3-6 மாதம் உட்கொண்டால் குணமடைய வாய்ப்புண்டு. ஆனால் முறையாக ஸ்கேன் தேவைப்பட்டால் Endometrial Biopsy செய்துகொள்ள வேண்டியது அவசியம். சரியாகவில்லை என்றால் ஆபரேஷன் அல்லது மாற்றுமுறை சிகிச்சை தேவைப்படும்.

என் வயது 20. இரண்டு வருடமாக மாதா மாதம் விலக்காவதில்லை. இதனால் கட்டி ஏற்பட வாயப்புண்டா? திருமணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்ய உறவு, குழந்தை பிறப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுமா?
சீதோஷ்ணம், டைபாய்டு, காசநோய், வைரஸ் போன்ற ஏதாவது ஒரு பாதிப்பால் உடல் பலவீனமாகியோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ மாதவிலக்கு நின்று நின்று வரலாம். சரியாக வராவிட்டால் கட்டிதான் என அர்த்தமில்லை. திருமணம் செய்துகொள்ளலாம். தாம்பத்ய உறவு, குழந்தை பெறுதல் ஆகியவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

பிறப்புறுப்பில் அரிப்பு
மாதவிலக்கு முடிந்து நாலைந்து நாட்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது. ஏன்? என்ன செய்வது?
நீங்கள் உபயோகிக்கும் துணி பாதுகாப்பானதாக, சுத்தமாக, 100% பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிக்கும். மாற்றிப் பாருங்கள். பலன் கிடைக்கும்.

பிசிஓடி ஒரு நோயல்ல
மகளுக்கு 23 வயது. மாதவிலக்கு ஒழுங்கின்மையால் டாக்டரிடம் சென்ற போது அவளுக்கு PCOD இருப்பதாக கூறினார். இதனால் குழந்தை பிறப்பது பாதிக்குமா?
இது ஒரு நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளியேறாத காரணத்தால் உண்டாவது. இந்த பிரச்னை பல வயதிலும் பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதில் தேவைப்படும் மருந்துகளோடு, உடற் பயிற்சி செய்வது, எடை குறைப்பது போன்ற முறைகளை கடைப்பிடித்தால் கருத்தரிப்பதிலோ குழந்தை பிறப்பதிலோ பிரச்னை வராமல் தடுக்கலாம். மாதவிலக்கையும் ஒழுங்குபடுத்தலாம்.

ஹார்மோன் மாத்திரையும் எடையும்
எனக்கு PCOD நோய்க்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட சொன்னார் டாக்டர். இதனால் உடல் பருமனாகிவிடுமா?
PCOD இருந்தால் உடல் பருமன் ஆகும் வாய்ப்பு அதிகம். மாத விலக்கை சீர்படுத்த கொடுக்கப்படும் Low Dose ஹார்மோன் மாத்திரை களால் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

காப்பர் டி வேண்டாம்
அடிக்கடி வயிறுவலி, அதிக ரத்தப் போக்கு என்று டாக்டரிடம் சென்றேன். எனக்கு Pelvic Inflammatory Disease(கிருமிகள் பாதிப்பு) இருப்பதாக கூறி மருந்துகள் கொடுத்து சரி செய்தார். அடுத்த குழந்தையை தள்ளிப்போட எந்த கருத்தடை முறை நல்லது?
கருத்தடை மாத்திரைகள் அல்லது Depo Provera என்ற மூன்று மாதத்துக்கொருமுறை போடும் ஊசி பயன்படுத்தலாம். காப்பர் டீயை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே உள்ள பாதிப்பை அது அதிகமாக்கும்.

அதிகமான வயிற்றுவலி
என் வயது 25. மாதவிலக்கு நாட்களில் எனக்கு அதிக வயிற்றுவலி இருக்கிறது. எதனால் இந்த வலி ஏற்படுகிறது? இதற்கு நிவாரணிகளை உபயோகிக்க லாமா?
மாதவிலக்கு நாட்களில் தாங்கக்கூடிய வயிற்று வலிவருவது இயற்கையே. ப்ராஸ்டோகிளாண்டின் (Prostoglandin) போன்ற ஹார்மோன்கள் சுரப்பதாலும், உள்ளே இருக்கும் உதிரத்தை வெளியே அனுப்புவதற்காக கர்ப்பப்பை பிசைந்து கொடுப்பதாலும் இத்தகைய வலி ஏற்படுகிறது. ஆனால் அந்த வலி நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலை இருந்தாலோ அல்லது வலியுடன் சேர்த்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டாலோ அதன் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது நலம். உங்கள் வயது 25. பூப்பெய்தும் காலத்தில் ஏற்படும் இந்த வலி சுமார் 25 வயதில் ஏறக்குறைய சரியாகி விடும். திருமணமும், குழந்தை பிறப்பும் இந்த வலியை நிவர்த்தி செய்துவிடும் என்பது விஞ்ஞானபூர்வமாகவும் அறியப் பட்டுள்ளது. வலியை சகிக்கும் தன்மை உங்களுக்கு குறைவாக இருந்தால் வலி அதிகமாக தெரியும். அந்த நாட்களில் ஒரே இடத்தில் தனிமையில் அழுது கொண்டிராமல் கவனத்தை திசை திருப்பினால் நிம்மதி. இது மனோ ரீதியான ஒரு தீர்வு.

கலர் பற்றி கவலை வேண்டாம்
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 மணி நேரம் பயங்கர வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். டாக்டரின் ஆலோசனைப்படி முதல் நாள் மட்டும் இரண்டு Bolonex OT மாத்திரையை தண்ணீரில் கரைத்து சாப்பிட்டேன். வலி குறைந்தது. ஆனால், அதன் பிறகு வந்த மாதங்களில் ரத்தம் பிரவுன் கலரில் இருக்கிறது. அளவும் கால்பங்காக குறைந்து விட்டது. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராகவும் அடுத்த 12 மணி நேரம் சிவப்பாகவும் இருக்கிறது. கை, கால் சோர்வு வேறு. விலக்கான முதல் 5 மணி நேரத்திற்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. இதனால் மணமான பின் குழந்தை பிறப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? மாதவிலக்கை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது.
மாத விலக்கின் போது முதல் 3 முதல் 5 மணி நேரம் வயிற்று வலி ஏற்படுவது சகஜம்தான். வலி நிவாரணி சாப்பிடு வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதையே பழக்கமாக்கி விடாதீர்கள். பிரவுன் கலரில் வருவதற்கும், ரத்தப்போக்கு குறைந்த தற்கும் அந்த மாத்திரை காரணமல்ல. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராக வும், அடுத்த 12 மணி நேரம் சிவப்பாக வும் இருப்பது பற்றி கவலைப்படாதீர்கள். முதலில் வெளியே வரும் உதிரமானது கருப்பையின் உள்ளே இருக்கும் சதை, ஜவ்வு, ரத்தம் எல்லாம் கலந்து கலர் அப்படித்தான் இருக்கும். பின்பு உதிரம் மட்டும் வெளியே வருவதால் சிவப்பு. பயத்தை விரட்டுங்கள். சாப்பிடுவது, தூங்குவதுபோல இது சாதாரண நிகழ்வு. அந்த நேரத்தில் உங்கள் கவனத்தை வேறு வேலை, பாட்டு போன்ற வற்றில் திருப்புங்கள். உங்களுக்குத்தான் பிரச்னையே இல்லையே. மணமான பிறகு என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது?

கருத்தரிக்க நல்ல நாள்
நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு மாதவிலக்குக்கு முன் 10 நாட்கள் முதுகு வலி (லோயர் பேக்) கால், மார்பு வலி ஏற்படுகிறது. கருத்தரித்த பிறகும் இப்படி இருக்குமா? முதுகு வலி, கால் வலி ஏற்பட்டவுடன் மனதில் சோர்வும் ஏற்படுகிறது. இந்த சூழ் நிலையில் கருத்தரிக்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்கலாம். (26-28 நாட்களில் கரெக்டாக வந்து விடுகிறது).
சரியான சுழற்சியில் மாதவிலக்கு வருவதால் கருத்தரிப்பதில் பிரச்னை இருக்காது. முதுகு, கால், மார்பு வலி என்பதெல்லாம் சாதாரணம். சோர்வும் அப்படியே. இந்த சூழ்நிலையில் கருத் தரிக்க முடியாது என்பது வீண் பயம். கருத்தரித்த பிறகு வலி, சோர்வெல்லாம் இருக்காது. மாதவிலக்கான நாளிலிருந்து 12 முதல் 16-ம் நாள் வரை உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது. முதல் 9 நாட்கள் கடைசி 10 நாட்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. இடைப்பட்ட நாட்களில் வாய்ப்பு அதிகம்.

வயிறு உப்புசம்
ஒவ்வொரு முறையும் எனக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் வயிறு உப்புசமாகி விடுகிறது? எதனால் இப்படியாகிறது? மருந்துகள் மூலம் சரிப்படுத்த முடியுமா?
இது சாதாரண பிரச்னைதான். வயிறு உப்புசம் மட்டுமின்றி உடல் முழுவதும் நீர் கோத்திருப்பது போன்ற உணர்வு, பேதி, வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். மாதவிலக்கின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை என விஞ்ஞான ரீதியிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாதவிலக்குக்காக உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு. எனவே, கவலைப்பட வேண்டாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மருத்துவரின் உதவியோடு நிவாரணிகளை நாடலாம்.

கர்ப்பப்பை பலவீனம்
மாதவிலக்கு 3, 4 நாட்களுக்கு மேல் நீடித்தால் கர்ப்பப்பை பலவீனத்தை காட்டுகிறதா? கர்ப்பப்பை பலவீனமானால் குழந்தை பிறப்பு பாதிக்குமா?
சாதாரணமாகவே மாதவிலக்கின் போது 6 நாட்கள் ரத்தப்போக்கு இருக்கலாம். அதுவே சாதாரணம் என்கிற போது, மூன்று நான்கு நாட்களை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். இதனால் கர்ப்பப்பை நிச்சயம் பலவீனமடையாது. குழந்தை பிறப்பிலும் பாதிப்பு இருக்காது.

என் வயது 21. மாதவிலக்கு ஒழுங்காக வருவதில்லை. சில மாதம் 28 நாட்களிலும் சில சமயம் 30, 32, 35, 38 என்றும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுமா?
வயது 21தான். பெரிதாக கவலைப்பட வேண்டாம். நாட்கள் அதிகமானாலும், எப்படியாவது சுழற்சி சரியாகிவிடும். இது 25 வயதிற்கு உட்பட்ட வயதில் சாதாரணமானதுதான். ஹார்மோன்களின் சுழற்சி, வேகம் போன்றவை சில மாற்றங்களுக்கும் சில தடைகளுக்கும் உட்படுவதால் இவை நேரலாம். மிக சரியான சுழற்சி வேண்டுமென்றால் ஹார்மோன் டெஸ்ட் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை அணுகலாம். உடல் நலத்தில் இதனால் பெரிய பாதிப்பு ஏதும் நிச்சயம் ஏற்படாது.

வெள்ளைப்படுதல் துர்நாற்றம்
எனக்கு வயது 37. எனக்கு மாதவிலக்கு முடிந்த பிறகு வெள்ளை அதிகம் படுகிறது. துர்நாற்றமும், லேசான அரிப்பும் இருக்கிறது. எதனால் இந்த பிரச்னைகள்? இதனை சரி செய்வது எப்படி?
மாதவிலக்கு முடிந்த பிறகு சிறிதளவு வெள்ளைப்படுவது சகஜம்தான். ஆனால் அரிப்பு, துர்நாற்றம் இருப்பதால் இது நிச்சயம் கிருமிகளின் தாக்கத்தைக் குறிக்கிறது. நாப்கின்களை சுத்தமாக உபயோகிப்பதும், அடிக்கடி பிறப்புறுப்பை சுத்தம் செய்வதும் நோயிலிருந்து காப்பாற்றும். உடனடி நிவாரணத்துக்கு மருத்துவரை அணுகி கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்து வாங்கி பயன்படுத்தினால் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம். உங்களுக்கு 37 வயது என்பதால் எதற்கும் Sugar டெஸ்ட் செய்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவு அதிகம் உண்டு.

கீரை, பழம் சாப்பிடுங்க
எனக்கு மாதவிலக்குக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது போல சிவப்பு படுகிறது. வெள்ளைப்படுதலும் உண்டு. இதனால் குழந்தை பிறப்பில் பாதிப்பு உண்டாகுமா? எனக்கு வயது 24. மணமாகி 8 மாதங்களாகின்றன. இதுவரை கரு உருவாகவில்லை. மருத்துவரிடம் காண்பித்தால் ஹீமோகுளோபின் 7.4 எம்.ஜிதான் உள்ளது என்று இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் மாதவிலக்கான 22 நாட்களில் வாந்தி வருவதுபோல இருக்கிறது. (31-ம் நாள் கரெக்ட்டாக பீரியட்ஸ் வந்து விடுகிறது.) இதனை சரிப்படுத்துவது எப்படி? வெள்ளைபடுதல் ஆபத்தா?
மாதவிலக்கு நாட்களுக்கு முன்பு லேசான ரத்தம் கலந்து வெள்ளைப் படுவது பொதுவான விஷயம்தான். மாத விலக்காக போகிறது என்பதற்கான அறிகுறிதான். இதனால் குழந்தை பிறப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மணமாகி 8 மாதங்களே ஆனதால் கரு உருவாகவில்லை என்று கவலைப்பட வேண்டாம். சேர்ந்து வாழ்ந்து 1 வருடத்திற்கு பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் டாக்டரை பார்க்கலாம். ஹீமோ குளோபின் 7.4 எம்.ஜி. என்பது சற்று கவலை தரக்கூடிய விஷயம்தான். மாத்திரைகளை மட்டும் நம்பாமல், இரும்புச் சத்துள்ள கீரை, காய்கறி, பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவை சாப்பிடுங்கள். வாந்தி பற்றியும் கவலை தேவையில்லை. சுழற்சி சரியாகவே இருக்கிறது. அரிப்போ, நாற்றமோ இல்லாத வெள்ளைப் போக்கால் எந்த பாதிப்பும் இல்லை. அது இயற்கையே.

கல் போல கட்டிகள் மாதவிலக்கான மூன்று நாட்களும் கட்டி கட்டியாக, கல் போலவும், அதிகமாகவும் போகிறது. விலக்கில்லாத நாட்களில் வெள்ளைநிற ஜவ்வு போல வெளியேறுகிறது. இது எதனால்? சிகிச்சை தேவையா?
மாதவிலக்கு எப்போதும் திரவமாக போவதுதான் சரி. கர்ப்பப்பையின் உள்ளே கட்டியாக ஏற்படும் மாதவிலக்கு சில மாற்றங்களால் திரவமாக்கப்பட்டு வெளிவரும். கட்டியாக வெளிப்படுவது உதிரப்போக்கு அதிகமாக இருப்பதையும், அந்த மாற்றங்கள் ஏற்படாமலே வெளியே வந்துவிடுகிறது என்பதையும் காண்பிக்கிறது. இதற்கு சிகிச்சை தேவை. எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால்கூட உதிரம் கட்டியாக வெளிவரலாம். ஸ்கேன் செய்து பாருங்கள்.

மாத்திரைகளின் பக்க விளைவுகள்
மாதவிலக்கு கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? (குழந்தை பிறப்பு, கர்ப்பம் அடைவதில் பாதிப்பு இப்படி..) விளக்கமாக கூறுங்கள்.
மாதவிலக்கு கோளாறுகள் பலவிதம். சுழற்சி சரியில்லாமல் இருக்கலாம். சரியாக இருந்தாலும் உதிரப்போக்கு அதிக மாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அல்லது சுழற்சியே இல்லாமல் அவ்வப்போது உதிரப்போக்கு ஏற்படலாம். எப்படி இருந்தாலும் சிகிச்சை பெறுவது நல்லது. பக்க விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கோளாறு களுக்கு காரணம் கண்டறிந்து சரி செய்துவிட்டால், கர்ப்பமடைவதிலோ குழந்தை பிறப்பிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பப்பை நீக்கியும் உதிரப்போக்கு
என் வயது 40. கோளாறு இருந்ததால் கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன். இப்போதும் மாதா மாதம் ரத்தப் போக்கு உள்ளது. எப்படி? இதனால் உடல்நலக் குறைபாடு ஏற்படுமா?
சினைப்பையை (ஓவரி) நீக்கி விட்டீர்களா என்பதை சொல்லவில்லையே.. வயது 40 தான் என்பதால் அதை நீக்கியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. கர்ப்பப்பையில் என்ன கோளாறு என்பதையும் குறிப்பிடவில்லை. ரத்தப்போக்கு மிதமாக அவ்வப்போது இருந்தால் பயப்பட வேண்டாம். அதிகமானால் ஏற்கெனவே ஆபரேஷன் காரணமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த வயதிலும் வரலாம்
என் மகளுக்கு 4 வயது. ஒவ்வொரு மாதமும் அவளுக்கு மாதவிலக்கு போல சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்படுகிறது. அவள் வயதுக்கு வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவா? இந்த வயதிலேயே அது சாத்தியமா? பயமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ வசதியே இல்லாத ஊரில் இருக்கும் எனக்கு சரியான ஆலோசனை தாருங்கள்.
நான்கு வயதில் கூட வயதுக்கு வந்த குழந்தைகள் உண்டு. இதை விரைவு படுத்தப்பட்ட பூப்பெய்தல் என்பார்கள். நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது மார்பக வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மறைவிடங்களில் முடி வளர்ச்சி இருக்கிறதா என்பதை. இந்த மாற்றங்கள் இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல சிறிதளவு ரத்தக் கசிவு அவ்வப்போது ஏற்படுவது நுண்கிருமி தாக்குதல் எனப்படும் வெஜைனைட்டிஸ் (Vaginitis) ஆகக் கூட இருக்கலாம். இதற்கு மிக சாதாரண சிகிச்சையே தேவைப்படும். அதே சமயம் நான்கு வயதிலேயே முழு வளர்ச்சி தென் பட்டால் உடலில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரக்கிறதா என்றும், அதற்கு என்ன காரணம் என்றும் மருத்துவரிடம் காட்டி தெரிந்து கொள்வது நலம். அரசு மருத்துவமனையிலோ குழந்தை நல மருத்துவரிடமோ பரிசோதியுங்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாம் பெண் குழந்தை பிறந்த இரண்டாம் நாள் அதற்கு லேசான வெள்ளைப் படுதல் இருப்பதை கவனித்தேன். இது ஏதாவது நோயின் அறிகுறியோ?
நிச்சயமாக நோய் அறிகுறி இல்லை. குழந்தைக்கு வெள்ளை படுவது மிக சாதாரண விஷயம்தான். பிறப்புறுப்பில் ரத்தம் வருவதுகூட இயற்கை. தாயின் உடலில் சுரந்த ஹார்மோன்கள் ஓரளவுக்கு குழந்தையின் ரத்தத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது. ஆனால், சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் இது நிற்காவிட்டால் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

அந்த நேரம் உடலுறவு வேண்டாமே
எனக்கு மாதவிலக்கின்போதுதான் உடலுறவு கொள்ளும் ஆசை அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், கணவரோ அது தப்பு என்று கூறி ஒதுக்குகிறார். எனக்கு ஏன் அப்படி ஆசை வருகிறது?
அந்த நேரத்தில் உறவு கொள்வது சரியா, தவறா? ?

பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கின்போது தாம்பத்ய உணர்வு மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் விதி விலக்கு போலும். ஆசை ஏற்படுவதில் தவறொன்றும் கிடையாது. அந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்ற நோய் வர வாய்ப்புள்ளது. அதாவது உதிரம் உடலுக்குள் சென்று கர்ப்பப்பை குழாய் வழியாக வெளியே வந்து படிந்து கர்ப்பப்பையை சுற்றியுள்ள இடங்களில் ரத்தக் கட்டிகளாக படிந்துவிடுவது.. மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொள்வதால் இத்தகைய நிலை வரலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே மிக அத்தியாவசியமாக இருந்தாலன்றி அந்த நாட்களில் தவிர்க்கலாமே!

பின்னாளில் பாதிப்பு
எனக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக உதிரப்போக்கு இருந்ததால் டாக்டர் கருத்தடை மாத்திரையை உபயோகிக்கச் சொன்னார். தொடர்ந்து இவற்றை உபயோகிப்பதால் பிற்காலத்தில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் வர வாய்ப்புள்ளதா?
அதிக உதிரப் போக்குக்கு கருத்தடை மாத்திரை உபயோகிப்பது சரியானது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனையுடனும், குறிப்பிட்ட காலம் வரையிலும்தான் உபயோகிக்க வேண்டும். மருத்துவர் அந்த மாத்திரைகளை தருமுன் அதனால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்று உங்களை பரிசோதித்து, உங்கள் பரம்பரை நோய்களை பற்றி தெரிந்து கொண்டு கொடுப்பார். அதிக நாட்கள் சாப்பிடுவதாலும் ஆலோசனை இன்றி சாப்பிடுவதாலும் சிலருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கருத்தடை மாத்திரை என்றவுடனே பயந்துவிட வேண்டாம். மணமாகாத பெண்களுக்குகூட அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற உதிரப்போக்கு, ஒழுங்கற்ற சுழற்சி போன்ற பிரச்னைகளுக்கு இந்த மாத்திரைகள் தரப்படுகின்றன. மேலே சொன்னவற்றுக்கெல்லாம் காரணம் ஹார் மோன்கள் குறைபாடு. அந்த ஹார் மோன்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்.

டீன் ஏஜ் கவனிக்கவும்
மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜ் பெண்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னென்ன?
டீன் ஏஜில் பெண்களுக்கு சுகாதாரமில்லாமல், நுண் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட்டால் அதனால் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் குழந்தை பிறப்பிலும் பிரச்னைகள் ஏற்படலாம்.
துணியைவிட இந்நேரத்தில் நாப்கினை உபயோகிப்பதுதான் நல்லது. சுகாதாரமானது, வசதியானது. நாப்கின் வாங்க வசதியில்லை என்பவர்கள், ஈரத்தை உறிஞ்சும் தன்மை அதிகமுள்ள மெல்லிய பருத்தித் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக நீளம், தடிமனாக இல்லாமல், நாப்கின் அளவிற்கே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங் கள். இதனை உள்ளாடைக்குள் (பேன்டீஸ்) வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது. நழுவிவிடும் என்ற பயம் இருக்காது. மேலாடையில் கறைபடாமலும் இருக்கும்.

இதனை நாள் முழுவும் வைத்திருக்காமல், ஓரளவு ஈரம் உறிஞ்சியதுமே எடுத்து சுத்தமாக துவைத்து வெந்நீரில் அலசி, காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ள இடத்தில் உலரவைத்து உபயோகிக்க வேண்டும்.
நாப்கின் உபயோகிக் கும்போது அதை கவரிலிருந்து கை, அழுக்கு படாமல் எடுத்து பிறப்புறுப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு வைத்துக் கொள்வதுதான் சரியான முறை. அந்த நாப்கின் முழுவதும் நனைந்த பிறகு அடுத்தது மாற்றலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஓரளவு நனைந்ததுமே மாற்றிவிட வேண்டும். லேசாக உதிரம் பட்டாலும்கூட ஒரே நாப்கினை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. முக்கிய விஷயம், உபயோகித்த நாப்கினை அப்படியே வீசி விடாமல், தண்ணீரில் சுத்தம் செய்து, கறையை நீக்கி அதை ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போட வேண்டும். இது மற்றவர்களின் ஆரோக்யத்துக்கும் நாம் மதிப்பு தரும் முறை.

அந்த நாட்களில் டென்ஷன், கோபம் ஏற்படுவது இயற்கை. இப்படி 200-க்கு மேல் மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஹார்மோன்கள் அதிகரிப்பு, சில வைட்டமின்கள் குறைபாடு (G.L". B6), வேலைப்பளு இவைதான் அதற்கு காரணம். ஆதரவான அன்பான சூழ்நிலையை ஏற்படுத்தினால் பலன் கிடைக்கும்.

சாப்பாடு முக்கியம்
மாதவிலக்கு நாட்களில் என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்? உணவுப் பொருட்களுக்கும், உதிரப்போக்கு, வலி, மனநிலை ஆகியவற்றுக்கும் தொடர்பு உண்டா?
அப்போது சாப்பிடும் உணவு வகைகளுக்கும், உதிரப்போக்கு, வலி ஆகியவற்றுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிலருக்கு அந்த சமயத்தில் லேசான வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று முன்பே கூறியிருந்தேன். அதோடு அந்த சமயத்தில் குடல், ஜீரண மண்டலத்தின் இயக்கம் சற்று மந்தமாக இருக்கும். அதனால் அதிக காரம், எண்ணெய் சேர்த்த, அஜீரணக் கோளாறுகளை உண்டாக்கக் கூடிய உணவுகளை தவிர்த்து எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிடுவது நலம். பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள், இரும்புச்சத்து மிக்க பேரிச்சம்பழம், முருங்கைக்கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கு நாட்களில் பிறப்புறுப்பில் அதிக முடி இருந்தால் அசவுகர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் முடி நீக்குவது சரிதானா என்று தெரியவில்லை. எந்த முறையில் எப்போது நீக்கலாம்? மென்மையான பிறப்புறுப்பின் மேலான முடிகள் அந்தப் பகுதிக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. மாதவிலக்கு சமயத்தில் கட்டாயம் முடிகளை நீக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அசவுகரியமாக உணர்ந்தால் நீக்குவதிலும் தவறில்லை. பிறப்புறுப்பு மட்டுமல்ல கை, கால்களில் முடியை நீக்குவதானால்கூட ரேசர் உபயோகிக்கக் கூடாது. அது சருமத்தை கடினமாக்கி முடியை விரைவாகவும், முன்பைவிட கடினமாகவும் வளரச் செய்யும். காயம் ஏற்படவும், இன்பெக்க்ஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த முடிகளை நீக்குவதற்கென்றே கிரீம்கள் உள்ளன. இவற்றை பூசி சற்று நேரம் விட்டுவைத்து பின்னர் பஞ்சு தேய்த்து எடுத்து விடலாம். நேரடியாக பூசக் கூடாது. முதலில் காது மடலுக்கு பின்புறம் சிறிதளவு தடவிப் பாருங்கள். எரிச்சல், தோல் உரிதல், தடிப்பு போன்ற எந்த பக்க விளைவுகளும் ஏற்படாவிட்டால் மற்ற இடங்களில் பயன்படுத்தலாம்.

Dienstag, April 06, 2004

பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ்

‘நான் சுமார் நாற்பது மணி நேரம் பிரசவ வலியால் அவஸ்தைப்பட்டேன்...’ ‘ச்சே... உனக்கு அவ்ளோதானா... நான் அம்பத்திரண்டு மணி நேரம்...’ இப்படி, தங்கள் பிரசவ அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் பெண்கள் நிறைய. பிரசவ வலி என்பது நாற்பது ஐம்பது மணி நேரமெல்லாம் வரும் விஷயமல்ல. லேசாக எடுக்கும் வலி அல்லது பிரசவ வலி போல் தோன்றக்கூடிய பொய் வலிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மட்டும்தான், மேலே சொன்ன ஐம்பது மணி நேர அவஸ்தை எல்லாம் சாத்தியம்..

True Labour Pain - அதாவது உண்மையான பிரசவ வலியை நாங்கள் கணக்கெடுக்கும் விதம் வேறு. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு Cervix (சர்விக்ஸ்) என்று பெயர். இந்த சர்விக்ஸ் மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையும்போதுதான் நாங்கள் அதை பிரசவம் தொடங்கிவிட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்வோம் (Active Labour).


பிரசவத்தை எதிர்கொள்ள அதை நாங்கள் மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரித்துக் கொள்வோம்.

முதல்கட்டம்: உண்மையான பிரசவ வலி தொடங்கி சர்விக்ஸ் பத்து சென்டிமீட்டர் (முழுவதுமாக விரிவடையும் கட்டம்) அளவுக்கு விரிவடையும் வரையுள்ள கட்டம்தான் முதல்.

இரண்டாம் கட்டம்: சர்விக்ஸ் முழுவதுமாக விரிவடைந்து அதன் வழியே குழந்தை முழுவதுமாக வெளிவருவது வரையிலான பகுதியை இரண்டாம் கட்டம் என்கிறோம்.

மூன்றாம் கட்டம்: குழந்தை வெளி வந்ததோடு விஷயம் முடிவடைவதில்லை. அம்மா உடலிலிருந்து நஞ்சுக் கொடி முழுவதுமாக வெளியேறுவதுதான் அதிமுக்கியம். இப்படி நஞ்சு வெளிவருவது வரையான பகுதியை மூன்றாவது கட்டமாகப் பிரித்துக் கொள்வோம்.

இந்த மூன்று கட்டங்களையும் கவனமாகக் கண்காணிக்க ‘பார்ட்டோகிராம்’ என்கிற ஒரு ரெகார்டை நாங்கள் வைத்திருப்போம். ரெக்கார்டு என்றால் பெரிதாக நினைத்துவிடாதீர்கள். அது வெறும் பேப்பர்தான். என்றாலும், இதுதான் பிரசவத்தின்போது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் தொடங்கி, அவர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், எப்போது வலி தொடங்கியது, அனுமதிக்கப்பட்ட போது குழந்தையின் நிலை எப்படி இருந்தது, அதன்பிறகு குழந்தை வெளிவர எந்தெந்தக் கட்டங்களை கடந்துள்ளது போன்ற எல்லா தகவல்களையும் அதில் எழுதி வைத்திருப்போம். இன்னும் சில தகவல்களை கிராப் படமாகப் போட்டும் கண்காணிப்போம்.

எதற்கு இந்த பார்ட்டோகிராம் என்றால், சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே பிரசவமாகலாம். இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்தும் பிரசவமாகலாம். பேஷண்ட் ஒருவராக இருந்தாலும் அவரை வந்து பார்க்கும் மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோர் அவ்வப்போது டியூட்டி மாறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி மாறி மாறி வருபவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பெண் பற்றிய தகவல்கள் உடனே தெரியத்தான் இந்த பார்ட்டோகிராம் பயன்படுகிறது. அதுதவிர பிரசவத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் அம்மா, குழந்தை என்ற இருவரைப் பற்றிய அத்தனை தகவல்களும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு ஒரு பார்வையிலேயே கிடைத்துவிடுவதால் இது மிகப் பயனுள்ள விஷயமாகக் கருதப்படுகிறது.

பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை.. லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல குழந்தை ரிலீஸ் ஆகும் சந்தோஷ தருணம் அது. சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வெறுவிதமாகவும் இது அமையும்.

பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும்.

முதல் பிரசவத்தின்போது மணிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடையத் தொடங்கும். அதுவே இரண்டாம், மூன்றாம் பிரசவங்களின் போது மணிக்கு 1.5_2 சென்டிமீட்டர் அளவுக்கு திறக்கும். இப்படி ஆவதுதான் நார்மல். இப்படி ஆனால்தான் பிரசவம் இயல்பாக நடந்துகொண்டிருப்பதாகவும் நாங்கள் கொள்வோம்.

ஏன், முதல் பிரசவத்துக்கு ஒரு சென்டி மீட்டராகவும் இரண்டாம், மூன்றாம் பிரசவத்துக்கு சற்றே அதிகப்படியாகவும் சர்விக்ஸ் விரிவடைகிறது என்று கேட்கிறீர்களா? முதல் பிரசவத்தின்போது சர்விக்ஸ் சற்றே இறுக்கமாக இருக்கும். காரணம், அதற்கு இது புது அனுபவமில்லையா... அதனால்தான். அதன்பிறகு அது சற்றே மிருதுவாகி விடுவதால்தான் அதற்கடுத்த பிரசவங்களின்போது அதனால், சற்றே அதிகப்படியாக விரிவடைய முடிகிறது.

கர்ப்பப்பை சரியானபடி இறுக்கமடைந்தால் (Contraction) மட்டும்தான் சர்விக்ஸ் இப்படி விரிவடைய முடியும். கர்ப்பப்பை சரியாக இறுக்கமடைகிறது என்று எப்படிச் சொல்வோம் என்று கேட்டால், அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. பத்து நிமிடங்களுக்கு மூன்று முறையாவது இறுக்கமடைந்தால்தான் கர்ப்பப்பை நார்மலாகச் செயல்படுகிறது என்று நாங்கள் கணக்கில் கொள்வோம். சாதாரணமாகவே இயற்கையாக வரவேண்டிய விஷயம் இது. இது சரியானபடி நடக்கிறதா என்று, நாங்கள் உண்மையான பிரசவவலி தொடங்கியதிலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பைக்குள் கைவிட்டுப் பரிசோதிப்போம். சர்விக்ஸ் 5_6 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையத் தொடங்கியதுமே, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரமாக உள்புற பரிசோதனைகள் செய்வோம்.

இப்படி கையை உள்புறமாக விட்டுப் பரிசோதிக்கும்போது, வெளிப்புறமாக செய்யப்படும் பரிசோதனையைவிட பல கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அதன்மூலம் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது மற்றும் குழந்தையின் தலை எந்த அளவுக்கு தாயின் இடுப்பெலும்புப் பகுதியில் இறங்கியிருக்கிறது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த சமயத்தில் தாயின் வயிற்றை வெளிப்புறமாகத் தொட்டுப் பார்த்தால், குழந்தையின் தலை இன்னும் தாயின் வயிற்றுக்குள் எந்தளவுக்கு உள்ளது என்கிற விஷயமும் தெரியவரும். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, எல்லாமே இயல்பாக நடந்தேறினால், இந்த சமயத்தில், இத்தனை மணி நேரத்துக்குள் பிரசவமாகிவிடும் என்று எங்களால் ஓரளவுக்கு முடிவு செய்ய முடியும்.

எல்லாமே இயல்பாகவே நடந்தாலும் சிலருக்கு நேரத்தோடு பனிக்குடம் உடையாமல் தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் காத்திருந்து பார்ப்போம். அது தானாகவே உடையாமல் போனால், நாங்களாகவே அதை செயற்கையாக உடையச் செய்துவிடுவோம். இதை மருத்துவரீதியாக Artificial Rupture of Membranes என்போம். இப்படி பனிக்குடம் உடைந்தால்தான் குழந்தை வேகமாகப் பிரசவமாகும்.

பனிக்குடம் உடையும்போது அதிலுள்ள நீர் வெளிவரும். அதை ‘Liquor Amni’ என்று மருத்துவரீதியாக அழைக்கிறோம். இந்த நீர் நார்மலாகத் தண்ணீர் போல எந்தவித நிறமும் இன்றி இருக்கும். இப்படித்தான் இருக்கவும் வேண்டும். ஆனால், சில சமயம் இந்த நீர் பச்சை, மஞ்சள் கலந்த ஒரு நிறமாக வெளிவரும். இது சாதாரணமான விஷயமல்ல... தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிட்டால், இப்படி பனிக்குட நீர் நிறம் மாறி வரும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலிலிருந்து இப்படி வெளியேறும் மலத்துக்கு ‘Meconium’ என்று பெயர். குழந்தை இப்படி தாயின் உடலுக்குள்ளேயே மலம் கழிப்பதன் மூலம் ‘நான் உள்ளே சவுகரியமாக இல்லை. சீக்கிரமே வெளியேற வேண்டும்’ என்று நமக்கு உணர்த்துவதாகத்தான் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவசரமான இந்த நிலைமையில் தாயின் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது என்று பார்ப்போம். 1_2 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்த நிலையிலேயே குழந்தை கர்ப்பப்பைக்குள் மலம் கழித்திருந்தால், தாமதிக்காமல் சிசரியன் செய்யத் தயாராகிவிடுவோம். அதுவே எட்டு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடைந்துக் கொண்டிருக்கும் நிலையில், நார்மல் டெலிவிரிக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரசவத்தின்போது அதிமுக்கியமான விஷயம், பாப்பாவின் தலை சரியானபடி இறங்கி வருவதுதான். இதுதான் பிரசவத்தை நார்மல் என்று கூட முடிவு செய்கிறது. பாப்பாவின் தலை உடனடியாக இல்லாமல் மெதுமெதுவாக அம்மாவின் வஜைனாவில் இறங்கி வரும். இயல்பாகவே பாப்பாவின் தலையிலுள்ள எலும்புகள் கொஞ்சம் விலகிய நிலையில்தான் இருக்கும். வஜைனாவில் இறங்கும் பாப்பாவின் தலைப்பகுதி, அங்கே சற்று இறுக்கப்படும்.

அப்போது பாப்பாவின் தலைப் பகுதியின் எலும்புகள் இறுக்கமாக ஃபிட் ஆகும். இந்த விஷயம் நார்மலாக நடந்தால்தான் பாப்பாவால் நார்மலாக வெளிவர முடியும். வெளிவந்த பிறகு பாப்பாவின் தலைப் பகுதி எலும்புகள் வழக்கம்போலவே அதே விலகிய நிலைக்கு வந்துவிடும்.

இந்த விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே CTG (Cardio Tocograph, இதற்கு Electronic Foetal Heart Monitoring என்று இன்னொரு பெயரும் உண்டு) என்கிற ஒரு கருவி வைத்து பாப்பாவின் இதயத் துடிப்பு, அம்மாவின் கர்ப்பப்பை இறுக்கமடைவது போன்ற விஷயங்களைக் கண்காணிப்போம். பெரியவர்களாகிய நம்முடைய இதயத்தின் இயக்கத்தைக் கண்காணிக்க ணி.சி.நி. கருவி பயன்படுவதுபோல, பாப்பாவின் இதயத் துடிப்பைப் பிரசவத்தின்போது கண்காணிக்க இந்தக் கருவி பயன்படுகிறது. இப்படிக் கண்காணிக்கப்படும்போது பாப்பாவின் இதயத்துடிப்பு குறைந்தால் (இது எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதில்லை. பிரச்னைக்குரிய சில பாப்பாக்களுக்கு மட்டுமே இப்படி ஆகலாம்.) அடுத்த கட்ட முடிவுகள் எடுக்க நாங்கள் தயாராகிவிடுவோம். பிரச்னைக்குரிய டெலிவிரி என்றால் அம்மாவுக்கு வலி தொடங்கியதிலிருந்தே சிஜிநி கொண்டு இருவரின் நிலையையும் தொடர்ந்து கண்காணிப்போம். பெரிய ரிஸ்கில்லாத பாப்பா என்றால், அரை மணிக்கு ஒரு தரம் சிஜிநி வைத்து கண்காணிப்போம்.

- மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் -
சந்திப்பு: ஜி.கிருஷ்ணகுமாரி
நன்றி - குமுதம்

Samstag, März 06, 2004

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க.............

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

திவ்யா
Quelle - Kumutham

Donnerstag, März 04, 2004

தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள்

சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1980 _ ம் ஆண்டில் 15 சதவிகிதம் இருந்த சிசேரியன், 1990 _ ம் ஆண்டில் 22 சதவிகிதமாகவும், 2002 _ ல் 30 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சிங்கப்பூர் பெண்கள் வேலை போன்றவற்றிற்காக குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதே. இந்நிலையில் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதில் வருத்தமளிக்கும் விஷயம், வயது காரணமாக சர்க்கரை வியாதி போன்றவை சில தாய்களுக்கு ஏற்படுவதுதான்.

இதனால் சர்க்கரை வியாதி இருக்கும் தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவே அங்கு மருத்துவர்கள் பயப்படுகின்றனர். காரணம், தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அது சட்டச்சிக்கலில் கொண்டு போய்விடுமோ என்றுதான்.

‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.

எனவே, தாய்மையைத் தள்ளிப் போடாதீங்க!

nantri - Kumutham

Dienstag, März 02, 2004

கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடு

கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத்
தெரிந்து கொள்வது எப்படி?


ஒரு பெண், கர்ப்பமுற்று அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரையான காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துக் கொள்வோம். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்டுகள் செய்துபார்த்து அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று கண்காணிப்போம்.

பேறுகாலத்தின் முதல் பகுதியில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ரத்தப் பரிசோதனையும் ஒன்று. இந்தப் பரிசோனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சோகை உள்ளதா, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பது போன்ற முக்கியமாக சில விஷயங்களைப் பார்த்து அதை சரிசெய்ய சிகிச்சை மேற்கொள்வோம்.

சர்க்கரை நோய் என்பது இந்த சமயத்தில் சில பெண்களுக்கு மரபு ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு மேல் இருந்தாலோ, வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைக்கு பலவித குறைபாடுகளை உண்டாக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை பேறு காலத்தின் முதல் பகுதியிலேயே அவசியம் செய்து பார்ப்போம்.

இன்னும் இதுபோன்ற பல நுணுக்கமாக விஷயங்களையும் கூட ரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பிணிப் பெண்ணின் ரத்தத்தில் Rhyping ஐ கண்டுபிடிப்பது. இதுபற்றி விரிவாகப் பார்க்கும் முன் இன்னொரு தகலைத் தெரிந்து கொள்ளுங்க...

நம் ரத்தத்தில் கி, ஙி, ளி என்று சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் இன்றோ பல ஆராய்ச்சிகளின் முடிவாக டஃப் கெல்லி என்று ரத்தத்தில் இன்று வேறு பல குரூப்களும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே வந்தது என்று பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குரூப் ரத்தம் கொண்ட சிலருக்கு ரத்ததானம் செய்யும்போது அது பொருந்தாமல் போய் வேறு வகையான ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒரே குரூப் ரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது Rhyping என்கிற ஒரு விஷயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது ரத்த குரூப்களில் இன்னொரு சப் பிரிவு. நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ் ஆகவும், மீதமிருப்பவர்களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக்கும். சரி இந்த சுhலிiபெ க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

உதாரணமாக கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் ரத்தம் ஸிபி நெகடிவ் ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும் ஸிபி பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு வகை ரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல் அதை எதிர்க்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும் இந்த அணுக்கள் அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின் ரத்த அணுக்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக் கோளாறுகள் உண்டாகலாம். உடம்பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக்கூடிய பிஹ்பீக்ஷீஷீஜீள திஷீமீவணீறீவீள என்கிற நிலை ஏற்படலாம். குழந்தையின் நார்மலான வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் கூட நேரலாம்.

Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய் விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்குள், இரண்டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அதை சரி செய்துவிடலாம். இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம் கருத்தரித்த உடனேயே ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.

அம்மாவின் ரத்தம் Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்னை. அதுவே அப்பாவின் ரத்தம் ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ இரண்டு பேருக்குமே ஸிபி நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்னை இல்லை.

ஸிபி நெகடிவ் ஆக இருக்கும்போது அம்மாவுக்கு முதல் குழந்தை ஸிபி பாஸிடிவ் ஆக பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான எழுபத்தியிரண்டு மணி நேரத்துக்குள் தாய்க்கு Antid Immuni Globulin என்கிற ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஊசி என்றாலும் இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக் கொடுத்தே ஆக வேண்டும்.

ஸிபி நெகடிவ் உள்ளவர்களுக்கு முதல் பிரசவம் ஆனால்தான் என்று இல்லை. அபார்ஷன் ஆனாலும்கூட, ஆன உடனே இந்த ஊசியை அம்மாவுக்குப் போட வேண்டும். கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் கூட தாய்க்கு இந்த ஊசியைப் போடவேண்டும்.

முன்னெல்லாம் ஸ்கேன் என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்_ஐ ஆரம்பத்தில் கருத்தரித்த 4_5 மாதங்கள் ஆனதும் தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ கருத்தரித்த 10_12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின் சில முக்கிய குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.

உதாரணமாக முதல் ஸ்கேன் செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிமனைத் தெரிந்துகௌ;ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிமன் இவ்வளவுதான் இருக்கமுடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாக சில குறைபாடுகள் இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக் குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே எடுக்கவும் கூட இந்த முதல் ஸ்கேன் உதவும்.

ஆனால் சில வீடுகளில் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத் தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.

இது தவிர கர்ப்ப காலத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 20_22 வாரங்களுக்குள் இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்போம். இதற்குள் குழந்தையின் முக்கிய உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் வளர்ச்சி நார்மலாக உள்ளதா என்று பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன்_ஐ கர்ப்பகாலத்தின் மூன்றாம் பகுதியில் செய்து பார்ப்போம். இதை வைத்து மீண்டும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க பொதுவாக இந்த மூன்று ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்து பார்க்கும் வசதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்வதை (அது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென) விரும்பமாட்டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்ப்பகாலத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து கொண்டால் போதும்.

கர்ப்பமடைந்த விஷயம் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே மருத்துவரைச் சந்திப்பது நல்லது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து கருவுக்கு முப்பத்தி நான்காம் வாரம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல் சந்திக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பி.பி., எடை எல்லாம் நார்மலாக உள்ளதா என்று சரி பார்ப்போம். மேலும் கர்ப்பப்பையின் அளவு மற்றும் வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல பனிக்குட நீரின் அளவையும் இந்த சமயத்தில் சரிபார்ப்போம்.

கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை அதிகரிக்கவே மாட்டேன்கிறது என்று சில வீடுகளில் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு சில பெண்களுக்குப் பெரிதாக வெயிட் போடாது. இதற்குக் காரணம், அதிகப்படியான வாந்தியும் அதன் காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் வெறுப்பும்தான். ஆரம்பக்காலகட்டத்தில்தான் இந்தப் பிரச்னை தலைதூக்குமே ஒழிய, பிறகு எடை ஏறத்தான் செய்யும். கடைசி பத்து வாரங்களில்தான் குழந்தையின் எடை வேகமாகக் கூடிப்போகும். காரணம் இந்த சமயத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியும் அதிகப்படியாக இருக்கும். பிரசவ காலத்தின்போது மொத்தத்துக்கும் தாயின் எடை 9_12 கிலோ வரை கூடுவதுதான் சரி.

கர்ப்பகாலத்தின் போது அம்மாவின் பி.பி. நார்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும். இதனால் பயப்பட ஒன்றுமில்லை. அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்கு ரத்தம் பாயும் நிகழ்வால் இப்படி இருக்கும். இது நார்மலான விஷயம்தான்.

Quelle - Kumutham