Freitag, Juli 28, 2006

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

மெனோபாஸ் என்றால் என்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டை யின் உற்பத்தி குறைவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?

சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?

ஓவரியில் ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?

1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்) :

ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்) :

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும். (‘‘நாற்பது வயதுக்கு மேல், பெண்களுக்கு திடீர் சோகம் ஏன்?’’ என்பதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.)

4. வெஜைனா உலர்ந்து போதல் :

ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் வெஜைனா உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?

பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

quelle - kumutham health

Dienstag, Juli 04, 2006

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ரீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.

கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற்றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக்கலாம்.

பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேரத்தில் மார்பகம் அளவிலும், வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. இது நார்மல்தான்.

கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடுகள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்து விட வேண்டும். இதனால் பலன் இல்லையென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.

பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக்சன் வருவது தடுக்கப்படும்.

மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர் சொல்லும் எக்சர்சைஸை விடாமல் செய்ய வேண்டும்.

மெனோபாஸ் தாண்டிய வயதில் சில பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இதற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கான ‘மேமோகிராம்’ டெஸ்டும் செய்து பாருங்கள்.

ஏதாவது சில காரணங்களால் மார்பகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருந்தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண்டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென்ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃபெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமாக இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக்டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்களால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்படத் தேவையில்லை.

குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இதுபோல இருந்தால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.

மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிருந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமாக இருந்தாலோ, மார்பகத்தில் அசௌகரியமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளில் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட் செய்து பாருங்கள்.

பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண்ணாடியின் முன் நின்று கையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங்கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.

கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப்பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இப்படித் தென்படும் உருண்டைகளில், பத்துக்கு ஒன்பது ஒருவேளை அவை ஆபத்தில்லாத டியூமராகவோ, அடைத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் கட்டியாகவோ அல்லது நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச்சை மூலமே எளிதில் நீக்கிவிடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கான வீக்கம் எனில் சற்றே கடினமாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இருக்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.

சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக்குகளைத் தருகிறார்கள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாகலாம்!

மனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாமல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.

மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெண்ட்டும், கீமோதெரபி சிகிச்சையும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கைகளின் அடிபாகத்தில்தான் அறுவை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.

பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிகவும் பெருமை என்று உலகம் முழுவதிலும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகிறது. ஆனால் இப்படி செயற்கை முறையில் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கான்சர் போலவே பயமுறுத்தக் கூடிய ஒரு விஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ்’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.

Quelle - kumutham sinekithi-15.6.2006

Sonntag, April 30, 2006

சினைமுட்டைப்பை(ovary) மாற்று சிகிச்சை

ஒரு சகாப்தம் இந்தியாவில்

- Srishiv -



இந்தக் கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம்,
குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே நம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் சிறந்த நகரமான மும்பையில் நடந்தேறியது. மருத்துவர். திரு. பிரவீன் ம்ஹாத்ரே என்பவரின் சீரிய முயற்சியால், டி.எஸ்.கோத்தாரி மருத்துவமணை , மும்பையில் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை நல்லமுறையில் நடந்தேறியது. இந்த சினைமுட்டைப்பையினை டர்னரின் நோய் (Turner's Syndrome)(இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு, ஒரே ஒரு x குரோமோசோம் மட்டுமே இருத்தல், இதன் விளைவுகள், குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிறக்கும் குழந்தை)(இந்த நோய் 2000 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு வரும் வாய்ப்புள்ளது)தாக்கியிருந்த ஒரு 17 வயது பெண்ணிற்கு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த டர்னரின் நோய் தாக்கிய குழந்தைகள் தங்கள் ஆயுளுக்கும் ஹார்மோன் தெரபி என்று கூறப்படும் ஒருவகை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும் , இந்த சிகிச்சை புற்றுநோயினை தோற்றுவிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சினைமுட்டைப்பையினை தானமாகக்கொடுத்தவர் அந்த பெண்ணின் 26 வயது உறவுப்பெண் ஒருவர், அவர் இரண்டு குழந்தைக்குத்தாயானவரும் கூட.


அரசாங்க விதிமுறைகளின் படியும், சட்டத்தின் படியும், இந்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், யார்வேண்டுமானாலும் இந்த சிகிச்சையினை இப்பொழுது செய்துகொள்ளலாம், இதன் மூலம், மாதவிடாய் சுழற்சியின் பிரச்சனைகள், மாதவிடாயே இல்லாதவர்களுக்கும் ஏற்படுத்துதல், கருமுட்டை உற்பத்தி மற்றும் அதன்மூலம் கரு உற்பத்தி, போன்ற பல பிரச்சனைகளைத்தீர்க்கமுடியும். மேலும், சட்டப்படி நம் மூன்றாம் உலக நாடுகளில் உயிரோடு இருக்கும் ஒருவரின் இருதயம் மற்றும் ஈரல் போன்ற உறுப்புகளை வேறொருவருக்கு மாற்றம் செய்யமுடியாது, முதல் உலகநாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளில் வேண்டுமானால் பகுதி ஈரல் மாற்று சிகிச்சை என்பது இப்போது சாத்தியத்தில் இருக்கும் ஒன்று. ஆனால், இந்த சினைமுட்டைப்பை மாற்று என்பதில் எந்த ஒரு சட்டச்சிக்கலும் இல்லை, மேலும், ஆரோக்கியமாக 35 வயதிற்குள்ளிருக்கும், ஒன்றிரண்டு குழந்தை பெற்ற எந்த பெண்ணும் தன் இரண்டு சினைமுட்டைப்பைகளுள் ஒன்றினை தாராளமாக தானமாக அளிக்கலாம். அது உறவினராகவோ அல்லது வேற்று ஆட்களாகவோ கூட இருக்கலாம் , இந்த 35 வயது அதிகபட்சமாக ஏன் நிர்ணயிக்கப்படுகின்றது எனில் , 35 வயதிற்கு மேல் பெண்களுக்கு அறுவை சிகிச்சையிலிருந்து ரணம் ஆறி குணம் பெற சற்று தாமதமாகலாம் என்பதாலே இந்த அதிகபட்ச வயது வரம்பு, தானம் பெறுவோருக்கு வயது வரம்பு இல்லை என்றே கூறியிருக்கின்றார் மருத்துவர்.


இன்றைய தேதியில் , விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், இன்றும் நம் நாட்டுப்புறங்களில் மாதவிடாய் வராத பெண்களினை இரண்டாம் தரமாக நடத்தும் கொடுமையினை இந்த மாற்று சிகிச்சை மாற்றிக்காட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் இதன்மூலம், மெனோபாஸ் என்று கூறப்படும் மாதவிடாய் நிற்றல் (வயது முதுமை அடையும்கால்) போன்ற நிகழ்வுகளிலிருந்தும் பெண்கள் விடுபெறலாம், இந்த மாற்று சிகிச்சை மூலம் எந்த வயதிலும் ஒரு பெண் குழந்தை பெறலாம், இது இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. மாற்று அறுவை சிகிச்சை செயத மருத்துவர் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தன் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சிறப்புப்படிப்பாக இந்த டர்னரின் குறைபாட்டினை தன் ஆய்வுக்கட்டுரைக்காக எடுத்துக்கொண்டு தன் இறுதி முடிவாக சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சையினை சிபாரிசு செய்தபோது அவரின் ஆசிரியர்கள் அனைவரும் சிரித்தது நம் மருத்துவரின் அறிவியல் ஆர்வத்தினை தூண்டிவிட அனைத்து சிறப்புக்கல்விகளையும் இதற்காகப்பயின்று இறுதியில் இன்று இந்தியாவிலும் ஒரு மாற்று சிகிச்சைக்கு அடிகோலமுடியும் என்று நிரூபித்து சரித்திரத்தில் நீங்காப்புகழ் பெற்றுவிட்டார் மருத்துவர் பிரவீன் ம்ஹாத்ரே. இவரினைத்தொடர்புகொள்ள :
pravinmhatre@hotmail.com
pravinmhatre@indiatimes.com

இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய ஆங்கிலச்சுட்டி :
http://www.scienceinafrica.co.za/2003/february/ovary.htm

மேலும் சூன் மாதம் 2005ஆம் ஆண்டில் ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தையினை தன் இரட்டை சகோதரியிடமிருந்து பெற்ற சினைமுட்டைப்பையின் மூலம் பெற்றெடுத்த ஒரு தாயின் விவரங்களையும் கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.nature.com/news/2005/050606/pf/050606-7_pf.html

மேலும் உலகின் முதல் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை பற்றி அறிய கீழ் காணும் சுட்டியினை சுட்டவும்,
http://www.exn.ca/Stories/1999/09/23/55.asp
பின் குறிப்பு : சென்ற கட்டுரை, சினைப்பையைப்பற்றியது, இது சினை முட்டைப்பையைப்பற்றியது, இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம், அதுவேறு , இதுவேறு, சினைப்பை என்பதை ஆங்கிலத்தில் யூட்ரஸ் என்பர், சினைமுட்டைப்பையை ஓவரி என்றும் அழைப்பர்.

ஸ்ரீஷிவ்...இந்திய தொழில்நுட்பக்கழகம் - குவஹாத்தி

quelle - பதிவுகள் srishiv

Donnerstag, April 13, 2006

செயற்கை கருப்பை - ஒரு வரம்

- ஸ்ரீஷிவ் -

தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.


இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.


இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."

இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?


- ஸ்ரீஷிவ் -
Quelle - பதிவுகள்

Freitag, Juni 03, 2005

கருத்தரிப்பதில் சிக்கலா...?

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் அவர்கள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை எப்படிச் சரிப்படுத்துவது எனச் சொல்கிறார்.

முன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம்.... தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்...

பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.

இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.

இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.

இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.

பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.

Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

ஜி.கிருஷ்ணகுமாரி
நன்றி - குமுதம் சினேகிதி

Samstag, April 23, 2005

ஆஸ்துமாவும் பெண்களும்

பரிமளாவுக்கு வயது முப்பது. தனியார் கம்பெனியில் வேலை செய்யும் கணவன், பள்ளி செல்லும் இரு பையன்கள் என்று சின்னக் குடும்பம்!

நடுத்தரக் குடும்பம் என்பதால், வீட்டு வேலைகளை அவளேதான் செய்வாள். அன்றும் வழக்கம்போல அனைத்து வேலைகளையும் அவளேதான் செய்தாள். அன்று... துணி துவைப்பது, வீட்டை ஒட்டடை அடிப்பது என்று நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள். வேலையை முடித்துவிட்டு மாலை ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவள் அமர்ந்த போதுதான் பிரச்னை ஆரம்பித்தது.

பரிமளாவுக்கு திடீரென மூச்சுத் திணறுவது போல இருந்தது. இயல்பாக மூச்சு விட முடியவில்லை. ஒரு மூக்கு முழுவதும் அடைத்து விட்டது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டுக்காரர்கள் தந்தார்கள் என்று ‘நேஸல் ட்ராப்ஸ்’ விட்டுப் பார்த்தும் குணம் கிடைக்கவில்லை. அவ்வப்போது மயக்கம் வருவது போல வேறு இருந்தது. டாக்டரிடம் காட்டினாள். ‘‘உங்களுக்கு தூசு அலர்ஜி இருக்கிறது. அதனால் இனிமேல் முடிந்தவரை தூசு பக்கமே போகாதீர்கள்’’ என்றார் டாக்டர்.

பரிமளாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை அவளுக்கு அலர்ஜி என்று எதுவும் ஏற்பட்டதில்லை. ‘‘கவலைப் படாதீர்கள். தூசுப் பக்கம் போக நேர்ந்தால், மூக்கை மூடுவது போல் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்!’ என்று ஆலோசனையும் தந்தார் டாக்டர்.

அலர்ஜிதான் ஆஸ்துமா நோய்க்கு அடிப்படை என்கிறார்கள் டாக்டர்கள். அதனால் அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்துவிட்டால் ஆஸ்துமா வராது. நோய்க் காரணியை இனம் கண்டுபிடித்து விட்டால், நோயைத் தடுத்து விடலாம் அல்லவா?

சரி... இந்த அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன? குறிப்பாக எந்த வயதினருக்கு இதனால் அதிகம் பாதிப்பு உண்டாகும்? அதிலும் பெண்கள், இந்த அலர்ஜியினால் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள்..? என்ற கேள்விகளுடன் அலர்ஜி நிபுணர்களை அணுகினோம்..

‘‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ்துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வரலாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லையே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்கள். ஆண்களின் வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

அதனால் ‘எக்ஸ்போஷர்’ அதிகமாகிறது. தூசும் மாசும் அதிகமான சூழல், டென்ஷன், வெளியுலக வேலை அழுத்தம், உடல் ரீதியிலான பல அசௌகர்யங்கள் என்று பல விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன.

சீயக்காயும் அலர்ஜியாகலாம்!

பெண்களுக்குத் தலை முடி அதிகம் என்பதால், அழுக்கும் தூசும் போகத் தலைக்குச் சீயக்காய் பவுடர் பயன்படுத்தி தேய்த்துக் குளிப்பார்கள். அந்த சீயக்காய் பல பெண்களுக்கு அலர்ஜிக்கு வழிவகுப்பதைப் பார்த்திருக்கிறேன். அதிலும் எளிதில் அலர்ஜிக்கு ஆளாகிறவர்களாக இருந்தால் வேறு பிரச்னையே வேண்டாம்!...

தூசும் முக்கிய காரணம்

சிலருக்கு சாதாரணமாக தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் போது கூட அந்த தூசுவினால் அலர்ஜி ஏற்படும். தூசு மூக்கினுள் சென்றவுடன் தும்மல் வரும். சிலருக்கு ஒரு தும்மலோடு நின்று விடும். சிலர் தொடர்ந்து தும்மல் போடுவார்கள். மூக்கிலிருந்து தண்ணீர் வழிய ஆரம்பிக்கும். அந்த அறிகுறிகளைத் தொடர்ந்து இருமல், வீஸிங் போன்ற தொல்லைகள் இருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சமையல் நெடியும் கூட!

அதேபோல், சமையல் செய்யும்போது வாணலியிலிருந்து கிளம்பும் நெடி கூட சிலருக்கு அலர்ஜி ஏற்படக் காரணமாகிறது!... நீண்ட நேரம் அடுப்படியில் நிற்பது, தாளிக்கும் போது உடனே மேலெழும்பும் வாசனை கலந்த புகை இவையும் மூக்கில் ஒருவித எரிச்சலை உண்டாக்கும். இதுவும் கூட அலர்ஜிக்கான காரணம்தான்.

மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பவர்களுக்கும் புகை மூலம் பிசச்னை வரும். வாணலியிலிருந்து கிளம்பும் நெடியை விட ஆபத்தானது இந்தப் புகை மண்டலம். அப்படியே, நுரையீரலில் போய்த் தேங்கிவிடும். இது கூட ஆஸ்துமா ஏற்படக் காரணம்தான்.

ஒரு விஷயத் தைப் புரிந்து கொள்ளுங்கள்! ஆஸ்துமாவை குணமாக்க முடியாது!.. ஆனால் அந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டுப்படுத்த முடியும். அதனால் முடிந்தவரை இந்த நோய் வருமுன்பே காப்பதுதான் நல்லது.’’ என்கிறார் டாக்டர் நரசிம்மன்.

பெண்களுக்கு ஒரு வித்தியாசமான காரணம்....

‘‘பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்பட அவர்களின் உடல்சார்ந்த காரணமும் ஒன்று. அதில் முக்கியமானது Atopy எனப்படும் ஒவ்வாமை இயல்பு!’’ என்கிறார் அலர்ஜி_ஆஸ்துமா நிபுணர் டாக்டர் கே.ஏ. மோகனதாஸ்.

‘‘இந்த ஒவ்வாமை இயல்புடைய பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஆஸ்துமா ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இவர்களில்கூட மூன்றில் ஒருÊ சதவீத பெண்களுக்குத்தான் குழந்தை பிறந்த பின்பு ஆஸ்துமாவின் கடுமை குறையலாம். ஆனால் கர்ப்பம் தரிக்கும்போது முதல் முறையாக உண்டாகும் ஆஸ்துமா மறுமுறையும் வரத்தான் வாய்ப்புகள் அதிகம்!

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவீன கஷ்டங்களான பரபரப்பு, வேலைப்பளு போன்றவற்றாலும், மன அழுத்தம், உணர்ச்சி வசப்படுதல் போன்ற காரணங்களாலும் பல பெண்கள் மறுபடியும் இந்த அலர்ஜி ஆஸ்துமா தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்! ’’ என்கிறார் டாக்டர் மோகனதாஸ்.

‘‘ஆஸ்துமா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதை வெளியில் சொல்வதில்லை. இது தவறு. சிலர் தங்களுக்கு வந்திருப்பது ஆஸ்துமாவே அல்ல என்று ‘அண்டர் எஸ்டிமேட்’ பண்ணியிருப்பார்கள். இதுவும் தவறு. நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல், உடனே டாக்டரிடம் போய்விட வேண்டும்.

(உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது? விவரங்கள், பாக்ஸ் மேட்டரில்)

எப்படி டெஸ்ட் செய்து கொள்வது?

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கும் அறிகுறிகளை நீங்கள் உணரும் பட்சத்தில் அதை முறைப்படி டெஸ்ட் செய்துகொள்ள நவீன பரிசோதனைகள் நிறைய வந்துவிட்டன. ‘இன்ஜெக்ஷன் இம்யூனோதெரபி!’ என்ற டெஸ்ட் எந்த வயதினருக்கும் செய்யலாம்.

‘பல்மோனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ என்ற பரிசோதனையின் மூலமும் ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.

என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?

மருந்துகள் உபயோகிப்பதை விட கருவிகள் பயன்படுத்தி ‘ஆஸ்துமா’வை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம். முடிந்தவரை எந்தவிதமான இன்ஃபெக்ஷனும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அநாவசிய மனபயம், பரபரப்பு போன்றவை அலர்ஜிக்குக் காரணமாகிவிடும். அதனால் தவிர்க்கலாம்.

ஸ்டீராய்டு இன்ஹேலர்கள் நல்ல பயன் தருபவை. மாத்திரைகள், கேப்ஸ்Êசூல் என்று நேரடியாக உட்கொள்வதை விட, இந்த இன்ஹேலர்கள் நல்லது.

இன்ஹேலர்களில் பல வகை... ரோட்டோஹேலர், அக்யூஹேலர், டயோஹேலர், நெபுலைஸர் என்று இருக்கின்றன. இவற்றில் ரோட்டோஹேலரில் உலர்ந்த நிலையிலேயே மருந்தை (DRY POWDER) வைத்துப் பயன்படுத்த முடியும். மாத்திரைகள் உடனடியாக பலனைத் தராது என்பதால், இந்த இன்ஹேலர் முறையே சிறந்தது.

கவனியுங்கள்... அலர்ஜிக்கான பரிசோதனை என்பது ஆஸ்துமா தடுப்பு முறைகளில் முக்கியமானது! எந்த வகையான அலர்ஜி என்பதை வைத்தே நோயின் தீவிரத்தை அறியலாம்.

தக்காளி, எலுமிச்சை, வேர்க்கடலை, பச்சைப் பயிறு உள்ளிட்ட உணவு வகைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா ஏற்பட்டிருக்கிறதா என்பதை இந்தச் சோதனை மூலம் கண்டுபிடித்து விட முடியும்.

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன் தரும். கடுமையான பயிற்சிகள் அவசியமில்லை. யோகாவுடன் கூடிய பயிற்சி நல்லது.

முடிந்தவரை தூசிக் காரணிகளிடமிருந்து விலகியே இருங்கள்.

எங்கெங்கே தூசுகள் இருந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்?

டி.வி.யிலும், அதன் ஸ்டாண்டுகளிலும் அடிக்கடி தூசு பரவி நிற்கும். ஏ.சி. ஃபில்டர்களில் தூசுப் படலங்கள் படிந்திருக்கலாம். தலையணைகளில் கூட தூசுப் பூச்சிகள் (DUST MITES) இருக்கும். இவை கண்களுக்குத் தெரியாது. தூங்கும் போது மூக்கின் வழியே உள்ளே சென்று அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது தலையணை உறையை சுத்தம் செய்வது அவசியம்.!

முக்கியமாக...

எக்காரணம் கொண்டும் டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் நீங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள். காரணம்... மாத்திரையின் அளவும், வீரியமும் உங்களுக்குத் தெரியாது என்பதுதான்.

உங்கள் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால், முதலிலேயே நீங்களும் ‘செக்அப்’ செய்து, உங்களுக்கு அலர்ஜி ஆஸ்துமா இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

_ எஸ். அன்வர்
nantri-Kumutham-sinehithi

Donnerstag, März 03, 2005

கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள்

- ப்ரியா பாலு -

அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.

பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்

கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்

வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.

nantri - sinehithi